நிதியமைச்சர் ப.சிதம்பரம் மாமியார், மைத்துனருக்கு நோட்டீஸ்
சென்னை: சென்னை அருகே உள்ள முட்டுக்காடு சதுப்பு நிலப் பகுதியில், ஆக்கிரமிப்பில் ஈடுபடுவதாக கூறி மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மாமியார் செளந்தரா கைலாசம், மைத்துனர் சடையவேல் கைலாசம் உள்ளிட்டோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஐந்து பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
மத்திய உவர்நீர் மீன் வளர்ப்புக் கழகம் சார்பில் அதன் இயக்குநர் அல்பிஸ் கீதானந்த் பொன்னையா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், முட்டுக்காடு, கோவளம் ஆகிய கிராமங்களில் உள்ள 122 ஏக்கருக்கும் மேற்பட்ட சதுப்பு நிலம் எங்களது கழகத்திற்குச் சொந்தமானது. எங்களது கழகம் மத்திய அரசின் ஒரு அங்கம். இந்திய விவசாய ஆய்வுக் கழகத்தின் கீழ் எங்களது கழகம் இயங்கி வருகிறது.
இந்த 122 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலம் எங்களது சொத்து, அரசின் சொத்து. இதை யாரும் எடுக்கவோ, ஆக்கிரமிக்கவோ முடியாது.
இந்த நிலையில், முட்டுக்காட்டைச் சேர்ந்த ஆலிவ் பீச் ரிசார்ட் டெவலப்பர்ஸ் என்கிற நிறுவனத்தின் சார்பில் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த சிவசுப்ரமணியம், ரவி ராமலிங்கம், செளந்தரா கைலாசம், சடையவேல் கைலாசம் ஆகியோர் சதுப்பு நிலப் பகுதியில், மண்ணைக் கொட்டி அதை ஆக்கிரமிக்கும் நோக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
அரசு நிலத்தை இது ஆக்கிரமிக்கும் செயல். கடலோர முறைப்படுத்தும் மண்டல சட்ட விதிகளுக்குப் புறம்பான செயல் இது. இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு இவர்கள் பாதிப்பு ஏற்படுத்துகின்றனர். சுற்றுச்சூழலை அழிக்கின்றனர். எனவே இதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.கே.கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முட்டுக்காடு நகர வடிவமைப்பு ஆணையம் மற்றும் மேற்கண்ட ஐந்து பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. வழக்கு நான்கு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications