சென்னை டிராபிக்: கோவைக்கு மாறுவோம்-விப்ரோ
சென்னை: சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் சரி செய்யப்படவில்லை என்றால் புதிய திட்டங்கள் கோவைக்கு மாற்றப்படும் என்று கூறியுள்ளது விப்ரோ நிறுவனம்.
சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படுவதாக இன்போஸில் உள்பட ஐடி நிறுவனங்கள் கவலை தெரிவித்து வருகின்றன. அலுவலக நேரங்களில் ட்ராபிக் ஜாமில் சிக்கி தவிக்கும் தங்கள் ஊழியர்களின் நிலை பரிதாபமாக உள்ளது, போக்குவரத்தை பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என்றும் அவை கூறி வருகின்றன.
இதைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனமும் சென்னை போக்குவரத்து நெரிசல் தொடர்பாக கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக விப்ரோ டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை தகவல் அதிகாரியும், தமிழ்நாடு ஐடி டாஸ்க் போர்ஸ் உறுப்பினருமான லக்ஷ்மண் கே பதிகா கூறுகையில், சென்னையில் போக்குவரத்து நெரிசல் மிகவும் அதிகமாகிவிட்டது.
இந்தப் பிரச்சினை சரி செய்யப்படாவிட்டால் 2ம் நிலை நகரங்களான கோவை உள்ளிட்டவற்றுக்கு நாங்கள் மாற வேண்டியிருக்கும் என்றார்.
சென்னையில் 6 இடங்களில் விப்ரோ நிறுவனம் இயங்கி வருகிறது. இதில் 12,000 பேர் பணியாற்றுகின்றனர். சோழிங்கநல்லூர் எல்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் மற்றும் மகேந்திரா சிட்டி சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் விப்ரோ நிறுவனத்தின் பல்வேறு கட்டுமான பணிகள் நடந்து வருகிறது.
இதில் சுமார் 35,000பேர் பணியமர்த்தப்பட உள்ளனர். இந்த இரு இடங்களும் போக்குவரத்து நெரிசலால் பாதிக்கப்படும் இடங்கள்.
இதுகுறித்து விப்ரோ துணை தலைவர் சந்திரசேகர் தர்மன் கூறுகையில், எல்காட் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலில் எங்கள் பணியாளர்கள் பெரும் இடையூறை சந்திக்க வேண்டியுள்ளது. ஐடி நிறுவன ஊழியர்கள் காலை மற்றும் மாலை அலுவலக நேரங்களில் மிகவும் அவதிப்படுகின்றனர்.
இந்த பகுதிகளில் சாலை பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதேபோல செங்கல்பட்டு அருகே அமைந்துள்ள மகேந்திரா சிட்டியிலும் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து குறைவாக உள்ளது. பிரதான சாலை என்பதால் போக்குவரத்து மிகவும் அதிகமாக உள்ளது என்றார்.
இன்போசிஸ், டிசிஎஸ், விப்ரோ, காக்னிஸன்ட் போன்ற பெரிய ஐடி கம்பெனிகள் கடந்த சில ஆண்டுகளாக சென்னையில் காலூன்றி வருகின்றனர். தேவையான பணியாளர்கள், இடங்கள் கிடைப்பதே இதற்கு காரணம். போக்குவரத்து நெரிசல் இந்த கம்பெனிகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வாடகைக்கு நிலம் வாங்கி கம்பெனியை விரிவுபடுத்தும் எண்ணம் உள்ளது. ஆனால் போக்குவரத்து பிரச்சனை தொடர்ந்தால், கோவைக்கு திட்டங்கள் மாற்றப்படும் என்று விப்ரோ தரப்பில் கூறப்படுகிறது.