'சரவணா': 2 ஊழியர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி
சென்னை: சரவணா ஸ்டோர்ஸ் ஊழியர்கள் இருவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக் கடையில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் கோட்டைச்சாமி, ராமஜெயம் ஆகிய இரு ஊழியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். பல கோடி பொருட்கள் சேதமடைந்தன. இந்த தீவிபத்தால் அருகில் உள்ள லக்கி பிளாசா வணிக வளாகத்தையும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாம்பலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பாத்திரக் கடை மேலாளர் செல்வம், கண்காணிப்பாளர் ஜெபசிங் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். கடை உரிமையாளர்களான யோகரத்தினமும், ராஜரத்தினமும் தலைமறைவாகி விட்டனர். அவர்கள் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் தள்ளுபடியாகி விட்டன.
இந்த நிலையில் செல்வமும், ஜெபசிங்கும் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் இன்று நீதிபதி ராமலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சம்பவத்தில் பல விதிமீறல்கள் நடந்துள்ளதாக தெரிகிறது. நிறுவனத்தின் உரிமையாளர்கள் தலைமறைவாக உள்ளனர். எனவே இவர்கள் இருவரையும் ஜாமீனில் விடுதலை செய்தால், வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என்று வாதிடப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, இருவரது ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications