மத பிரசாரம்: சென்னை பள்ளி நிர்வாகிகள் கைது
சென்னை: கோவையில் மத பிரசாரத்தில் ஈடுபட்ட சென்னை தனியார் பள்ளி தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள ஈஸ்ட்கோஸ்ட் மெட்ரிக்குலேசன் பள்ளியைச் சேர்ந்த 112 மாணவ-மாணவிகள் நேற்று முன் தினம் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர். அவர்களுடன் பள்ளித் தாளாளர் நிர்மலா பீட்டர் தலைமையில் 10 ஆசிரியர்கள் சென்றிருந்தனர்.
நேற்று முன்தினம் கோவை சென்றடைந்த அவர்கள் காந்திபுரம் பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கினர். நேற்று இரவு காந்திபுரம் கிராஸ்கட் பகுதியில் சாப்பிட சென்றனர். அப்போது ஆசிரியர்களும், மாணவர்களும், அந்த வழியாக போவோர் வருவோரிம் துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து மத பிரசாரம் செய்தனர். கிறிஸ்தவ மதத்துக்கு அழைக்கும் நோட்டீஸ்களைக் விநியோகம் செய்தனர்.
அந்த நோட்டீஸில் இந்து கடவுள் கிருஷ்ணரையும், ஏசுவையும் ஒப்பிட்டு வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. அப்போது, காந்திபுரம் இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த ஒருவரிடமும் ஆசிரியர்கள் நோட்டீஸை கொடுத்தார். அதை வாங்க அவர் மறுத்தார்.
நோட்டீஸை வாங்காமல் சென்ற அவரை ஆசிரியர் ஒருவர் திட்டியதாகத் தெரிகிறது. பதிலுக்கு இந்து முன்னணி பிரமுகரும் பேசியுள்ளார். இதையடுத்து அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவலறிந்த காந்திபுரம் பகுதியை சேர்ந்த இந்து முன்னணி, சிவசேனா பிரமுகர்கள் திரண்டனர். மதபிரசாரம் செய்யுங்கள். நோட்டீஸை வாங்கும்படி ஏன் வற்புறுத்துகிறீர்கள். மாணவர்களை எதற்காக இதில் ஈடுபடுத்துகிறீர்கள் என்று இந்து அமைப்பினர் ஆசிரியர்களை கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது.
பின்னர் ஆசிரியர்கள் தொடர்ந்து மத பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காட்டூர் போலீஸில் இந்து முன்னணி, சிவசேனா பிரமுகர்கள் புகார் செய்தனர்.
இதையடுத்து இந்து முன்னணி மாநில பேச்சாளர் சிவலிங்கம், மாநகர பொறுப்பாளர் சசிகுமார், பாஜக மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன், ஏ.டி.ராஜன், விஜயாரவி, செல்வ குமார் உள்பட ஏராளமானவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.
கோவையில் யாரும் மதபிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று ஏற்கனவே தடை உத்தரவு உள்ளது. இந்நிலையில் உத்தரவை மீறியதால் பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து துணை கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர்.
அங்கு மதபிரசாரம் செய்து கொண்டிருந்த பள்ளி தாளாளர் நிர்மலா பீட்டர், பள்ளி முதல்வர் சாலமன் தேவதாஸ், ஆசிரியர் ஜே.டேவிட், சுற்றுலா வழிகாட்டி அந்தோணி பாபு, அலுவலக உதவியாளர் ஜீவானந்தம் ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.
விசாரணையில், மத கலவரத்தை தூண்டும் வகையில், மற்ற மத கடவுள்களை அவமதித்து பிரசாரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 5 பேர் மீதும் கலவரம் ஏற்படுத்த தூண்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்துதல், மாணவர்களை மதபிரசாரம் செய்ய தூண்டுதல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவை ஜாமீனில் வெளியில்வர முடியாத சட்டப்பிரிவுகளாகும்.
அவர்கள் 5 பேரும் கோவை முதலாவது ஜூடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். மத மாற்றத்துக்கு வலியுறுத்திய குற்றத்துக்காக அவர்களை அடுத்த மாதம் 7ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதனால் சுற்றுலா சென்றிருந்த மாணவ, மாணவிகள் செய்வதறியாது தவித்தனர். அவர்களை போலீசார் இன்று சென்னைக்கு பத்திரமாக திருப்பி அனுப்பி வைத்தனர்.