கருணாநிதி தந்தி அனுப்பச் சொல்வதால் யாருக்கு என்ன பயன்?: ஜெ.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடரந்து தாக்கப்படுகின்றனர். உள்நாட்டு சண்டை என்ற பெயரில் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இந்த விவகாரித்தில் முதல்வர் கருணாநிதி சிறிதும் அக்கறை இல்லாமல் இருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினேன்.
இதற்கு கருணாநிதி என் மீது குற்றம் சுமத்துகிறார். ஈழத்தமிழர் பிரச்சனையில் நான் நிலையில்லாமலும், மனம் போனபடியும் பேசுவதாக பழி சுமத்துகிறார். இலங்கை தமிழர் விவகாரத்தில் என்னுடைய நிலைப்பாடும் அதிமுகவின் நிலைப்பாடும் அனைவரும் அறிந்ததே.
இலங்கையி்ல மற்ற குடிமக்களை போல தமிழர்களும் சம உரிமையுள்ள குடிமக்களே. அவர்கள் யாருக்கும் இரண்டாம் தரமானவர்கள் அல்ல.
சட்டத்தின் முன் சமத்துவம் வேண்டியும் கல்வி, வேலைவாய்ப்பில் சமத்துவம் பெறவும் இலங்கை தமிழர்கள் நடத்தும் நெடிய போராட்டத்தை நாங்கள முழுமையாக ஆதரிக்கிறோம்.
சுய நிர்ணய உரிமை வேண்டி அவர்கள் நடத்தும் தார்மீக போராட்டத்தை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கிறோம்.
இலங்கையில் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தமிழர்கள் தங்களுக்கென சுயாட்சி உரிமையுள்ள தாய் தமிழகம் உருவாக்கிக் கொள்ள அவர்களுக்கு இருக்கும் வேட்கையை நாங்கள் புரிந்து ஏற்றுக் கொள்கிறோம்.
ஆயுத போராட்டத்தால் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்படுவதை கண்டு வேதனைப்படுகிறோம். ஆயுத போராட்டத்தை எதிர்க்கிரோம். இதனால் முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். தமிழர் விடுதலைக்காக போராடிய பல தமிழ்த் லைவர்கள் இலங்கை மண்ணலே கொல்லப்பட்டதை எதிர்க்கிறோம்.
இலங்கை தமிழர் பிரச்சனையில் இருவேறு பக்கங்கள் உள்ளன என்பதை உணர வேண்டும். சுய நிர்ணய உரிமைக்கென்ற தமிழர் போராட்டம் ஒரு புறம். ஆயுதம் ஏந்தியவர்கள் பயங்கரவாதத்தில் ஈடுபடுவது மறுபுறம். இதில் இரண்டாவதை கடுமையாக எதிர்க்கிறோம்.
நான் ஏற்கனவே முதல்வர் கருணாநிதிக்கு ஒரு அறிவுரை தெரிவித்திருந்தேன். தமிழக முதல்வராக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கருணாநிதி இருப்பதால், ராஜபக்சேவை தொடர்பு கொண்டு, இனப்படுகொலையை நிறுத்த உத்தரவிடுமாறு பிரதமரை கருணாநிதி கேட்டுக் கொள்ள வேண்டும் என நான் கூறியிருந்தேன்.
ஆனால் பதிலுக்கு கருணாநிதி, புதுமையான யோசனையை தமிழக மக்களுக்கு அளித்துள்ளார். பிரதமர் அலுவலகத்திற்கு நெருக்கடி தரும் வகையில் லட்சக்கணக்ககான தந்திகளை அனுப்புங்கள் என்று தமிழக மக்களிடம் அவர் கூறியுள்ளார்.
அதேபோல அக்டோபர் 6ம் தேதி நடந்த பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகையில், தேவைப்பட்டால் பிரதமருக்கு நெருக்கடி தர ஆட்சியிலிருந்து விலகவும் தயார் என்று அறிவித்தார் கருணாநிதி.
2004ம் ஆண்டு மே மாதம், கருணாநிதி தனிப்பட்ட முறையில் டெல்லி சென்ற கருணாநிதி மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்பட்ட 7 திமுகவினரையும் பதவியேற்கக் கூடாது. டி.ஆர்.பாலுவுக்கு கப்பல் துறை கொடுக்கப்படும் வரை பதவியேற்கக் கூடாது என அறிவுறுத்தி விட்டு வந்தார். சொன்னபடியே கப்பல் துறையையும் பெற்றார்.
ஆனால் தமிழர்கள் தொடர்பான பிரச்சினைகளின்போது மட்டும் வெறுமனே மக்களுக்கு அறிவுரை கூறுவதோடு நிறுத்திக் கொள்கிறார். தந்தி அனுப்புங்கள் என்று கூறுகிறார். இவ்வளவுதான் தமிழர்களைப் பற்றி இவர் படும் கவலை.
இலங்கையில் நடைபெறும் சண்டையால், ஆயிரக்கணக்கான தமிழர்கள் இடம் பெயர்ந்துள்ளனர். வீடுகளை இழந்து, அகதிகள் போல தாயகத்திலேயே வசிக்கும் அவலத்தில் உள்ளனர்.
உணவு, மருந்து, குடியிருக்க வசதி இல்லாமல் போராடிக் கொண்டிருக்கின்றனர். பெண்களும், குழந்தைகளும் இந்த துயரிலிருந்து விடுபடாமல் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்தப் பின்ணனியில் தந்திகள் அனுப்பச் சொல்வதும், உயர்ந்த மட்ட அதிகாரிகளைக் கூப்பிட்டு (இலங்கை துணைத் தூதர்) கண்டிப்பதும் பாதிக்கப்படும் தமிழர்களுக்கு உதவுவதாக அமையாது.
பாதிக்கப்படும் தமிழர்கள் குறித்து மாநிலத்திலும்,மத்தியிலும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்களுக்கு கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா?.
பாதிப்புக்குள்ளாகியுள்ள இலங்கைத் தமிழர்களுக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மத்திய அரசு சேகரித்து அனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.