டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு-பீதி

இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை 1.10 மணியளவில் மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினருக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய பயணிகள், விமான நிலையத்திற்குள் ஒரு குவாலிஸ் கார் வந்தது. அதில் இருந்த நபர்கள், காரிலிருந்தபடியே சரமாரியாக துப்பாக்கியால் சுட்டபடி சென்றனர் என்று கூறினர்.
இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக கமாண்டோ படையினர் வரவழைக்கப்பட்டு விமான நிலையத்தில் குவிக்கப்பட்டனர்.
விமான நிலையத்தில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்திற்கு வருகிற அனைத்து வாகனங்களும் தீவிரமாக சோதனையிடப்படுகின்றன.
இந்த சம்பவம் குறித்து டெல்லி விமான நிலைய மத்திய தொழிலக பாதுகாப்புப் படை டிஐஜியான உதயன் பானர்ஜி கூறுகையில், சில பயணிகளிடமிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக எங்களுக்குப் போன் வந்தது. இது துப்பாக்கிச் சூடுதான் என்பதற்கான ஆதாரம் இதுவரை எங்களுக்குக் கிடைக்கவில்லை. தோட்டாக்கள் எதையும் கைப்பற்றவில்லை.
அந்த சத்தத்திற்குப் பின்னர் மத்திய தொழிலகப் படையினர், டெல்லி போலீஸார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். விமான நிலையத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
தற்போது நிலைமை இயல்பாகியுள்ளது. விமானப் போக்குவரத்தில் பாதிப்பில்லை. பயணிகள் நடமாட்டமும் வழக்கம் போல உள்ளது என்றார்.
டெல்லி காவல்துறை செய்தித் தொடர்பாளர் ராஜன் பகத் கூறுகையில், நான்கு அல்லது ஐந்து முறை துப்பாக்கியால் சுட்டதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதில் யாரும் காயமடையவில்லை.
உண்மையிலேயே இப்படி நடந்ததா அல்லது பயணிகள் பீதியில் கூறினார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.
நேற்றுதான், அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத்தை விமானத்தைக் கொண்டு தாக்கி அழித்தது போல இந்தியாவிலும் செய்ய தீவிரவாதிகள் திட்டமிட்டிருப்பதாக விமானப்படைத் தலைமைத் தளபதி கூறியிருந்தார். இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, பெங்களூர் விமான நிலையங்களில் மிக பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி விமான நிலையத்தில் துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டதாக தகவல் வெளியாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications