இடைத்தேர்தல்: மதுரை மாவட்டத்தில் பொங்கல் பரிசுக்கு தடை
சென்னை: திருமங்கலம் தொகுதியில் இடைத் தேர்தல் நடப்பதால் மதுரை மாவட்டம் முழுவதுமே பொது மக்களுக்கு பொங்கலுக்கான இலவச வேஷ்டி- சேலை வழங்க தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது.
இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை 100 சதவீதம் வழங்கப்பட வேண்டும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவுறுத்தியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை இப்போதிருந்தே தொடக்கவும் ஆணையிட்டுள்ளது.
தமிழகத்தில் தேர்தல் கமிஷன் கூறியுள்ள தரத்துக்கு ஏற்ப நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு கடினமான பணிகளை மேற்கொள்ள வேண்டியது உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நடத்துவதற்காக கூடுதல் பணியாளர்கள் தேவை என்றால் அதுபற்றிய விவரங்களை எங்களிடம் தேர்தல் கமிஷன் கேட்டுள்ளது.
திருமங்கலத்தில் இடைத்தேர்தல் நடப்பதால் மதுரை மாவட்டம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துவிட்டன. இதனால் அந்த மாவட்டம் முழுவதும் அரசு திட்டங்களை செயல்படுத்த முடியாது.
தமிழக அரசால் பொங்கலுக்கு வழங்கப்படும் இலவச வேட்டி, சேலைகளை தேர்தல் நடவடிக்கைகள் முடியும் வரை (ஜனவரி 15ம் தேதி வரை) வழங்கக்கூடாது. வெள்ள சேதத்துக்கு உள்ளான மாவட்ட பட்டியலில் மதுரை இல்லை என்பதால், வெள்ள நிவாரணம் வழங்குவது பற்றிய பேச்சே எழவில்லை.
திருமங்கலம் தொகுதியில் 1,55,647 ஓட்டுகள் உள்ளன. அங்கு 99 சதவீதத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கிவிட்டோம்.
தேர்தல் தொடர்பாக தமிழக அரசை இந்திய தேர்தல் கமிஷன் ஆலோசிக்கவில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது அவரது கருத்து. அதுபற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.
இந்தியாவில் சில தொகுதிகளில் 27ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. அதோடு சேர்த்து திருமங்கலம் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தி இருக்கலாம்.
ஆனால் தொகுதிகள் மறுசீரமைப்புக்கு முந்தைய வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இடைத் தேர்தலை நடத்த வேண்டியதுள்ளது. அதற்காக தனி சாப்ட்வேர் தயாரிப்பது போன்ற பணிகள் வந்து விட்டதால்தான் ஜனவரி 9ம் தேதி வரை தாமதமாகி விட்டது.
அதிமுகவின் விதி மீறல்:
வேட்பு மனு தாக்கலின்போது அதிமுகவினர் தேர்தல் விதிமுறைகளை மீறியுள்ளனர். வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளரோடு 5 பேர்தான் சம்பந்தப்பட்ட அலுவலரின் அறைக்குள் செல்ல வேண்டும். ஆனால் பல பேர் கும்பலாக உள்ளே சென்றிருக்கிறார்கள்.
போலீசாரின் கவனக்குறைவால் இந்த சம்பவம் நடந்துள்ளது. நாங்கள் மதுரை கலெக்டர் மூலமாக மாவட்ட போலீஸ் எஸ்பிக்கு இதுபற்றி அறிவுரை வழங்கி இருந்தோம். அதுதவிர டி.ஜி.பிக்கும் கடிதம் அனுப்பி இருந்தோம்.
அதிமுக வேட்புமனு தாக்கல் செய்த போது நடந்த சம்பவங்களை வீடியோவில் பதிவு செய்திருந்தோம். அதை தேர்தல் கமிஷன் பார்வைக்கு அனுப்பி இருக்கிறோம். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்னென்ன நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றி தேர்தல் கமிஷன்தான் முடிவு செய்யும்.
திருமங்கலம் தொகுதிக்கான மத்திய தேர்தல் பார்வையாளர்கள் வேட்பு மனு பரிசீலனைக்கு முன் வந்து விடுவார்கள்.
மங்களூர் தொகுதியை காலி என்று தமிழக அரசு அறிவித்தால் மட்டுமே, அதற்கும் இடைத்தேர்தல் நடத்துவது பற்றி தேர்தல் கமிஷன் பரிசீலிக்கும் என்றார் குப்தா.