சென்னை-வீட்டில் தனியே இருந்த பெண் படுகொலை
சென்னை: சென்னையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவர் கற்பழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
சென்னையில் தனியாக இருக்கும் முதிய தம்பதியினர், பெண்கள் கொலை செய்யப்படுவது, கற்பழிக்கப்படுவது, நகைகள் கொள்ளை அடிக்கப்படுவது அதிகரித்து வருகிறது.
சமீபத்தில் கே.கே.நகரிலும், சைதாப்பேட்டையிலும் வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், புழல் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண் கொடூரமாகக் கொல்லப்பட்டார்.
புழல் விநாயகபுரம் வீரராகவ நகரில் வசித்து வந்தவர் மீனாட்சி. 27 வயதாகும் இவரது கணவர் சந்திரசேகரன், டர்னராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
இவர்களுடன் சந்திரசேகரனின் தாயும், தந்தையும் வசித்து வருகின்றனர்.
நேற்று சந்திரசேகரன் வேலைக்குப் போய் விட்டார். தந்தை வெளியே போய் விட்டார். தாயார் கல்யாணி அம்மாள் தனது உறவினர் வீட்டுக்குப் போயிருந்தார்.
இந்த நிலையில் பிற்பகல் 2 மணியளவில் கல்யாணி அம்மாள் வீடு திரும்பினார். அப்போது மீனாட்சி படுக்கை அறையில் அரை நிர்வாண நிலையில் அலங்கோலமாக பிணமாகக் கிடந்தார்.
அவரது கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. ரத்தம் ஆறு போல ஓடி உறைந்து கிடந்தது. மேலும் வலது மார்பகம், கை ஆகியவற்றில் அரிவாளால் வெட்டப்பட்ட காயம் காணப்பட்டது.
உடனடியாக போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். மீனாட்சியின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பபப்பட்டது.
மீனாட்சி கற்பழிக்கப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டிருக்கலாகம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். 3 பேர் இந்தக் குற்றத்தில் ஈடுபட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
மீனாட்சி கொலை செய்யப்பட்டபோது அவர் நிச்சயம் கூச்சல் போட்டிருக்க வேண்டும். ஆனால் அக்கம் பக்கத்தில் எந்த சத்தமும் கேட்கவில்லை என்று கூறியுள்ளனர்.
வீட்டிலிருந்து எந்தப் பொருளும் திருடு போகவி்ல்லை. அதேபோல மீனாட்சியின் உடலில் இருந்த நகைகளும் திருடு போகவில்லை.
இந்தக் கொடூரக் கொலை குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.