முதலீடு-என்ஆர்ஐகளுக்கு கருணாநிதி அழைப்பு
சென்னை: வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழகத்தில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு முதல்வர் கருணாநிதி பேசியதாவது ...
இந்த மாநாட்டை சென்னையில் நடத்துவதற்காக நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது நாம் மிகப்பெரிய சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது.
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு நவீன இந்தியாவை கட்டமைத்தார். மக்கள் பல்வேறு மொழி, மதம், கலாச்சாரத்தை உடையவர்களாக இருந்தாலும் ஒரே சமூகமாக வாழ்வது இந்தியாவின் பலமாகும். அந்த வகையில் இந்த மாநாட்டில் பங்கேற்க வந்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்ககளை ஒன்று சேர்க்கும் வகையில் இந்த மாநாடு நடக்கிறது.
யாதும் ஊரே யாவரும் கேளீர்:
அவர்கள் அனைவரையும் வாழ்த்துக்களுடன் வரவேற்கிறேன். தமிழ் புலவர் கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று கூறியுள்ளார் அதற்கு எல்லா ஊரும் நமது ஊர், எல்லோரும் நமது உறவினர்கள் என்பது பொருளாகும்.
இந்தியா மனிதவளம் மிக்க நாடு. உலக அளவில் இது இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளது. வெளி நாடுகளில் வாழும் இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
உலகின் பல்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும், வன்முறையை விரும்பாமல் வாழ்ந்து வருகிறார்கள் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வன்முறை வேண்டாம் என்பதை புத்தர் போதித்தார். இந்த போதனை உலகின் பல்வேறு பகுதிகளுக்கு இந்தியர்களால் எடுத்துச் செல்லப்பட்டது.
இதே செய்தியைத்தான் காந்தி அடிகள் அகிம்சை' என்று கூறினார். தென் ஆப்பிரிக்காவில் வன்முறை இல்லாத கொள்கையை நிலை நிறுத்தினார். உலகம் இந்தியாவிடம் இருந்து இந்த பாடத்தை படித்துக் கொள்ளும் என்று நம்புகிறேன்.
கலாச்சார ரீதியாக நாம் எல்லோரும் ஒன்றாக இருக்கிறோம். வெளிநாட்டில் வாழும் இந்தியருக்கு ஒரு அநீதி நடக்கிறது என்றால் அது எந்த அளவுக்கு வேதனையாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.
தற்போதைய சூழ்நிலையில் உலக பொருளாதார வீழச்சி பெரிய சவாலாக உள்ளது. இதில் இந்தியாவை பொறுத்தவரை தமிழ்நாடு உலக அளவில் பொருளாதார சரிவில் இருந்து மீள்வதற்கு முக்கிய பங்கை அளித்து வருகிறது.
தமிழ்நாடு தொழில்நுட்பம் தெரிந்த ஊழியர்கள் சக்தியை கொண்டுள்ளது. நன்கு வளர்ச்சி அடைந்த தொழில் அமைப்பை உருவாக்கி உள்ளது. இதன் மூலம் புதிய உருவாக்கங்களும் பொருளாதார அறிவு திறனும் இங்கு உள்ளது.
எங்கள் அரசு சர்வதேச முன்னணி நிறுவனங்களை இங்கு முதலீடு செய்ய ஊக்கம் அளித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் பல நிறுவனங்கள் தங்கள் தொழில்களை இங்கு அமைத்துள்ளன. அல்லது விரிவாக்கம் செய்துள்ளன.
சமீப காலத்தில் டைம்லர், ரெனால்ட், நிசான், ஹுண்டாய், போர்டு, நோக்கியா, டெல், மோட்டாரோலோ, சாம்சங் போன்ற நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை அமைத்து உள்ளன.
எனது ஆட்சியில் மேலும் பல தொழில்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதன் மூலம் 32 ஆயிரத்து 100 கோடி முதலீடு இங்கு வருகிறது. இதனால் 1 லட்சத்து 95 ஆயிரம் ஊழியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள்.
இங்கே வந்திருக்கும் பலர் பெரிய நிறுவனங்களில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களாக இருப்பீர்கள் என கருதுகிறேன். நீங்கள் உங்கள் நிறுவனத்தின் மேலாண்மை நிர்வாகத்திடம் இதுபற்றி சொல்லி இந்தியா குறிப்பாக தமிழ்நாடு முதலீடு செய்வதற்கு உகந்த இடம் என்று கூறுங்கள்.
இந்த மாநாடு எங்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். நமது கலாச்சாரம், எண்ணங்கள் பகிர்ந்து கொள்ள வாய்ப்பாக அமைந்துள்ளது.
இந்தியா இன்று உலகில் முக்கிய பங்கு வகிக்கும் நாடாக உள்ளது. உலக பொருளாதார வளர்ச்சியின் ஒரு எந்திரமாக இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் தூதராக இருந்து பங்களிப்பை தர வேண்டும் என்றார் கருணாநிதி.