சென்னையில் குடியரசு தின கொண்டாட்டம் - ஆளுநர் கொடியேற்றினார்
சென்னை: தமிழகத்தில் இன்று குடியரசு தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சென்னை மெரீனா கடற்கரையில் நடந்த கண்கவர் விழாவில் ஆளுநர் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் குடியரசு தின விழாவையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அங்கு அமைக்கப்பட்டிருந்த சிறப்பு பந்தல் வளாகத்தில் காலை 7.55 மணிக்கு ஆளுநர் பர்னாலா தேசியக் கொடியை ஏற்றி வைத்து சல்யூட் செய்தார். முன்னதாக முதல்வர் கருணாநிதி உடல் நலமில்லாததால், அமைச்சர் அன்பழகன், முதல்வர் சார்பில் கலந்து கொண்டார்.
ஆளுநர் பர்னாலாவை அவர் வரவேற்றார். தேசியக் கொடியை ஏற்றி வைத்த பின்னர் ஆளுநர் உரை நிகழ்த்தினார்.
பின்னர் வீர தீரச் செயலுக்கான விருதுகளை அமைச்சர் அன்பழகன் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும், கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.
பலத்த பாதுகாப்பு
குடியரசு தின விழாவையொட்டி, மாநிலம் முழுவதும் உள்ள வி்மான நிலையங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், முக்கிய வணிக வளாகங்கள், மக்கள் கூடும் பகுதிகள், வர்த்தக மையங்கள், தியேட்டர்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாநகரங்களில் எல்லைப் பகுதிகளில் தீவிர வாகனத் தணிக்கையும் மேற்கொள்ளப்பட்டது.
கடலோரங்களில் உஷார் நிலை
இலங்கையில் கடும் சண்டை நடந்து வரும் நிலையில், தமிழ கடலோரப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிஜிபி கே.பி.ஜெயின் கூறுகையில், இலங்கையில் நிலவி வரும் சூழலைக் கருத்தில் கொண்டு தமிழக கடலோரப் பகுதிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இலங்கையில் நடந்து வரும் சம்பவங்கள் குறித்து நாங்கள் அறிவோம். எனவே பாதுகாப்பை அதற்கேற்ப பலப்படுத்தி வருகிறோம் என்றார்.
தமிழ சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி ராஜேந்திரன் கூறுகையில், கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இலங்கை நிலவரம் மட்டுமல்லாமல் குடியரசு தினமும் வருவதால் இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
அகதிகள் முகாம்களில் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications