ஊழியர்களுக்கு சம்பளமில்லை; பெரும் சிக்கலில் சுபிக்ஷா!
இந்த நிறுவனப் பணியாளர்களுக்கு கடந்த இரு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், மேற்கொண்டு நிறுவனத்தை நடத்த குறைந்தது ரூ.300 கோடி தேவை என்றும் சுபிக்ஷா தரப்பில் அதன் நிறுவனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2008-ன் இரண்டாவது காலாண்டில் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக ஏற்பட்ட பாதிப்பிலிருந்து நிறுவனத்தால் மீள முடியவில்லை என்றும், இதுவே இப்போது கழுத்தை நெறிக்கும் அளவு வளர்ந்து கம்பெனியை மூழ்கடித்துக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சுபிக்ஷாவுக்கு இப்போது ரூ. 700 கேடிக்கும் மேல் கடன் உள்ளதாம். எந்த வங்கியும் கடன் தர முன்வராத நிலையில், இதன் பல கிளைகளுக்கும் பொருட்களைக் கூட வாங்க முடியவில்லையாம். இதனால் பல கிளைகளில் வெற்று அலமாரிகளே காட்சி தருகின்றன.
நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளமாக மட்டும் ரூ.20 கோடி தரவேண்டியுள்ளதாம். சுபிக்ஷாவுக்கு பொருட்களை சப்ளை செய்தவர்களுக்கு மட்டுமே ரூ.45 கோடி தரவேண்டுமாம். இதையெல்லாம் சரிசெய்யத்தான் ரூ.300 கோடி தேவைப்படுகிறதாம்.
'எப்படியும் இந்தத் தொகையைப் புரட்டிவிடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. கூடிய சீக்கிரம் மீண்டும் பழையபடி வருவோம்', என்கிறார் சுப்பிரமணியன். பல நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் முயற்சியில் உள்ளாராம் சுப்பிரமணியன்.
'வங்கிகள் இந்த நேரத்தில் உதவ முன்வர வேண்டும். சுபிக்ஷாவை ஒழித்துவிட வேண்டும் என கடன் தருபவர்களும், வங்கிகளும் நினைத்துவிட்டால் நாங்கள் என்ன செய்ய முடியும். ஆனால் சுபிக்ஷா என்பது பொன் முட்டையிடும் ஒரு வாத்து. இதற்கு உயிர் தர வேண்டிய தருணம் இது. இந்த ஆண்டு நாங்கள் எதிர்பார்க்கும் ரூ.300 கோடியும் கிடைத்துவிட்டால், ரூ.4,300 கோடி வர்த்தகத்தை எதிர்பார்க்கலாம்', என்கிறார் சுப்பிரமணியன்.