சேலை கட்டிய முசோலினி சோனியா-நாஞ்சில் சம்பத்
திருப்பூர்: இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமான சோனியா சேலை கட்டிய முசோலினி என மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசினார்.
திருப்பூரில் நடந்த இலங்கை தமிழர் ஆதரவு கருத்தரங்கில், நாதியற்றவனா இலங்கை தமிழன் என்ற தலைப்பில் நாஞ்சில் சம்பத் பேசுகையில்,
பஞ்சாபில், காலிஸ்தான் கோரிக்கை எழுந்தபோது, ஏஎஸ்எஸ்எப் மாணவர் அமைப்பு நடத்திய போராட்டமே டெல்லி ஏதேச்சதிகாரத்தை தட்டிக் கேட்டது. தமிழக மாணவர்களும் இதற்கு முன்வர வேண்டும்.
இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர். இதே நிலை தொடர்ந்தால், டெல்லியில் தமிழகத்தின் தூதரகம் அமைய வேண்டிய நிலை ஏற்படும்.
பாகிஸ்தான் பிரிவினை குறித்து பேச்சு எழுந்த போது, கற்பனை என்று கூறிய நேரு, உண்மையாகவே பிரிந்தபின், வாழ்த்துச்செய்தி அனுப்பினார். இதுவும் கற்பனை அல்ல. டெல்லியில் தமிழக தூதரகம் அமைய நேரிடும். அப்போது, வாழ்த்து அனுப்ப வேண்டிய இடத்தில் நாங்கள் இருப்போம்.
இத்தாலியில், சர்வாதிகாரி முசோலினி இறந்து விட்டான். ஆனால், அவன் சேலை கட்டி சோனியா காந்தி ரூபத்தில் இந்தியா வந்துள்ளான். தன்னைப் பிடிக்காத, தனக்குப் பிடிக்காத மாமியார் இந்திரா காந்தியை கொன்ற சீக்கியர்களுக்கு அவர் பிரதமர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை கொடுத்துள்ளார்.
கணவன் இறந்து விட்டதற்காக அவர் என்ன கைம்மை நோன்பா இருக்கிறார். கட்டாந்தரையில் படுக்கிறாரா... சுகபோகமாக ராணியாகத்தானே வலம் வருகிறார். மன்மோகன் சிங் வாயில்லாதவர். வெறும் குரங்கு. சோனியா தான் குரங்காட்டி. இந்தியாவின் உள்துறை அமைச்சராக சிதம்பரம் என்ற தமிழர் இருக்கிறார். அதனால் என்ன பயன்?.
நாங்கள் என்ன "ஸ்பெக்ட்ரம்' ஊழலில் பங்கு கேட்டோமா, சொத்தில் பங்கு கேட்டோமா, விருந்துக்கு அழைக்கச் சொன்னோமா, மானாட மயிலாட நிகழ்ச்சிக்கு அழைக்கச் சொன்னோமா, ஈழத் தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுக்கத்தானே சொன்னோம்.
வக்கீல்கள், மாணவர்கள் என இலங்கை தமிழர்களுக்கான போராட்டம் சீராக போய் கொண்டிருந்தது. அதை திசை திருப்ப வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையில் பிரச்சனையை ஏற்படுத்தி, போலீசை கட்டவிழ்த்து விட்டு விட்டார்.
தமிழகத்தில் 12 மத்திய அமைச்சர்கள் உள்ளனர். இவர்கள் தேவையில்லாமல் பிறந்தவர்கள். உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூத்தாண்டவர் கோவிலுக்கு போக வேண்டியவர். இவர்களின் கல்லறைக்கு கூட தமிழகத்தில் இடம் கொடுக்கக் கூடாது.
இவ்வாறு நாஞ்சில் சம்பத் பேசினார்.