நாளை மீண்டும் 3வது அணி உதயம்-அதிமுகவும்..
இந்திய அரசியலில் எப்போதுமே பெரிய ஜோக் இந்த மூன்றாவது அணி. கொள்கைரீதியி்ல் எந்தவிதமாக ஒற்றுமையே இல்லாத உதிரிப் பூக்களான கட்சிகள் இணைந்து அவ்வப்போது உருவாக்கும் கதம்ப மாலை தான் மூன்றாவது அணி.
இந்த அணியில் இன்று காலை சேர்பவர் மாலையில் அந்த அணியில் இருப்பாரா என்பது நிச்சயமில்லை. இந்த அணியில் அதிக முறை இணைந்து, அணியை விட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஓடி வந்தது யார் என்று ஒரு போட்டி வைத்தால் அதிமுகவுக்கே தங்கப் பதக்கம் கிடைக்கும்.
அந்த அளவுக்கு இவரை நம்பி இந்த அணி பலமுறை கலகலத்துப் போயிருக்கிறது. முதலில் முலாயம் சிங் முயற்சியில் இந்த அணி உருவானது. அதில் அதிமுக இணைந்தது. ஆனால், திடீரென மாயமானது.
அடுத்ததாக சந்திரபாபு நாயுடு முயற்சியில் இந்த அணி உருவானது. அதிலும் அதிமுக இருந்தது. ஆனால், மாயாவதி தான் தலைவர் என்ற அறிவிப்பு வந்ததாலும், தன்னைத் தலைவியாக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படாததாலும் அதை விட்டு விலகினார் ஜெயலலிதா.
இந் நிலையில் பெங்களூர் அருகே நடக்கும் நிகழ்ச்சியில் நாளை மீண்டும் இந்த அணி அதிகாரப்பூர்வமாக உருவாகவுள்ளது. இதில் முக்கியமான அம்சம். இந்த அணியில் அதிமுகவும் பங்கேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது தான்.
முன்னாள் பிரதமரும் மீண்டும் பிரதமராகும் கனவுடன் பல காலமாக யாகங்கள் நடத்திக் கொண்டிருப்பருமான மதசார்பற்ற ஜனதா தளத் தலைவர் தேவே கெளடா தான் இந்த முறை இந்த அணியை உருவாக்குவதில் அதிக முனைப்பு காட்டியுள்ளார்.
எப்போதுமே கெளடா, அவரது மகனும் முன்னாள் முதல்வருமான குமாரசாமிக்கு அரசியல்ரீதியில் நெருக்கமாக இருப்பவர் ஜெயலலிதா என்பது குறிப்பிடத்தக்கது.
கெளடா உருவாக்கும் இந்த மூன்றாவது அணியில் மதசார்பற்ற ஜனதா தளம் தவிர, தெலுங்கு தேசம், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி, அதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பிஜு ஜனதா தளம் ஆகியவை இணையும் என்று கெளடாவே கூறியுள்ளார்.
நாளை நடக்கும் இதன் துவக்க விழாவில் இடதுசாரி கட்சித் தலைவர்களான பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன், சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ், அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கேற்கிறார்களாம்.
இது குறித்து நிருபர்கிடம் பேசிய கெளடாவிடம், மீண்டும் பிரதமராகும் திட்டத்துடன் தான் இந்த அணியை உருவாக்குகிறீர்களா என்று கேட்டதற்கு, அப்படியெல்லாம் இல்லை. அணியில் இடம் பெற்றுள்ள எந்த கட்சியின் தலைவரும் பிரதமராக வரலாம் என்றார்.