Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சத்யம்: டெக் மஹிந்திரா வசமானது எப்படி?

Subscribe to Oneindia Tamil

Anand Mahindra
50000 ஊழியர்களின் எதிரக்காலம் குறித்த கேள்விக்குறி கிட்டத்தட்ட ஆச்சர்யக் குறியாக மாறி இருக்கிறது, சத்யம் நிறுவனத்தின் புதிய முதலாளியாக டெக் மஹிந்திரா மாறியதன் மூலம்!

நிறுவனர் ராமலிங்க ராஜுவின் பெரும் மோசடியில் சிக்கி, நற்பெயரைக் கெடுத்துக் கொண்டதோடு, வர்த்தக ஆதாரத்தையும் இழக்கும் அபாயத்தில் இருந்த சத்யம் நிறுவனத்தை வேறு தகுதியான நிர்வாகத்தின் கைகளுக்கு மாற்றிவிட கிட்டத்தட்ட மூன்று மாத காலம் பல முயற்சிகளை மேற்கொண்டது அரசு நிர்ணயித்த சத்யம் இயக்குநர் குழு.

கடைசியில் இந்த சத்யம் நிறுவனத்தின் பங்குகள் ஏலத்தில் ஒரு பங்குக்கு ரூ.58 வரை தர முன் வந்த டெக் மஹிந்திராவின் வசம் வந்துள்ளது சத்யம். முழுக்க முழுக்க ரொக்க அடிப்படையில் ரூ.1,756-க்கு சத்யம் நிறுவனத்தின் 31 சதவிகித பங்குகளையும் வாங்கிக் கொண்டது டெக் மஹிந்திரா. மீதி 20 சதவிகித பங்குகளை சில நாட்களுக்குப் பிறகு வெளிப்படையான வர்த்தகம் மூலம் பங்குதாரர்களிடமிருந்து டெக்மஹிந்திரா வாங்கிக் கொள்ளும்.

ஆக மொத்தம் 51 சதவீத பங்குகளுக்காக டெக் மகிந்திரா செலவிடவுள்ள தொகை ரூ. 2,890 கோடியாகும். இதன்மூலம் சத்யம் நிறுவனத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ. 5,700 கோடி என்ற நிலையை எட்டியுள்ளது.

சத்யம் நிறுவனத்தை கையகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் நான்காவது பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்துள்ளது டெக் மஹிந்திரா.

சத்யம் நிறுவனம் நடஷ்டத்தில் தடுமாறினாலும், சர்வதேச அளவில் சிட்டி குரூப் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளது. இன்னமும் 500 நிறுவனங்கள் சத்யம் நிறுவன சேவையை பயன்படுத்துகின்றன.

எனவே சத்யம் நிறுவனத்தைக் கையகப்படுத்த பெரிய நிறுவனங்களான லார்சன் அண்ட் டூப்ரோ, ஐகேட்ஸ், ஐபிஎம், ஸ்பைஸ், காக்னிஸன்ட், வில்பர் ரோஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்கள் விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்தன.

இவர்களில் வில்பர் ரோஸ் சத்யம் நிறுவனப் பங்கு ஒன்றுக்கு ரூ.20 மட்டுமே விலை நிர்ணயித்தது. ஐபிஎம், ஸ்பைஸ் க்ரூப் போன்றவை கடைசி நேரத்தில் விலகிக் கொள்ள லார்டன் அண்ட் டூப்ரோ மற்றும் டெக் மஹிந்திராவுக்கிடையே கடுமையான போட்டி நிலவியது. லார்சன் அண்ட் டூப்ரோவுக்கு ஏற்கெனவே சத்யம் நிறுவனத்தில் 12 சதவிகிதப் பங்குகள் இருப்பதால், அந்த நிறுவனம்தான் சத்யம் ஏலத்தில் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் லார்சன் அண்ட் டூப்ரோ பங்கு ஒன்றுக்கு ரூ.49 மட்டுமே தர முன்வந்தது. ஆனால் டெக்மஹிந்திரா ரூ.58 என ஏலத்தொகையை நிர்ணயித்தது.

இதனால் ஏலத்தில் டெக் மஹிந்திரா வென்றதாக அறிவிக்கப்பட்டது.

இதன்படி 30,27,64,327 பங்குகள் (31 சதவிகிதம்) டெக்மஹிந்திராவுக்கு மாற்றப்படுகிறது. ஆனால் அதற்கு முன் இந்தப் பங்குகளுக்கான தொகையான ரூ.1756 கோடியை வங்கியில் செலுத்தியிருக்க வேண்டும் டெக்மஹிந்திரா.

மொத்த ஏலத் தொகையையும் வருகிற ஏப்ரல் 21-ம் தேதிக்குள் செலுத்தாவிட்டால், இந்த ஏலம் செல்லாததாகிவிடும். ஒருவேளை இப்படி நடந்தால் டெக் மஹிந்திராவுக்கு அடுத்த நிலையில் உள்ள ஏலதாரர் வென்றதாக அறிவிக்கப்படுவார்.

இந்த ஏலம் மற்றும் அது தொடர்பான விவாதங்களில் பங்கேற்காமல் விலகியிருந்தனர் சத்யம் நிறுவன இயக்குநர்கள் தீபக் பரேக் மற்றும் எஸ்பி மைனாக். மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் இயக்குநர்களுள் பரேக்கும் ஒருவர். எல்ஐசியின் செயல் இயக்குநர் மைனாக்.

இவர்கள் இருவருமே ஏலம் கேட்ட நிறுவனங்களில் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள் என்பதால், சர்ச்சைகளைத் தவிர்க்க விலகிக் கொண்டனர்.

இந்த ஏலத்தில் சத்யம் நிறுவனத்தின் நிதி ஆலோசகர்களாக அவென்டிஸ் மற்றும் கோல்ட்மேன் சாஷ் நிறுவனங்கள் செயல்பட்டன. அமர்சந்த் அண்ட் மங்கள்தாஸ் அண்ட் சுரேஷ் ஏ ஷராப் நிறுவனம் சட்ட ஆலோசகராக செயல்பட்டது. லாதம் அண்ட் வாட்கின்ஸ் நிறுவனம் அமெரிக்க சட்ட ஆலோதகராக செயல்பட்டது.

'மகிழ்ச்சி... சத்யமான மகிழ்ச்சி!'

'டெக்மஹிந்திரா நிறுவனத்தின் கைகளில் சத்யம் நிறுவனத்தை ஒப்படைப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது சத்யமான மகிழிச்சி. சத்யத்தின் 50000 ஊழியர்களின் சார்பில் டெக் மஹிந்திராவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம் என சத்யம் இயக்குநர்கள் குழு' நேற்று தெரிவித்துள்ளது.

'வாடிக்கையாளர்களுடன் பேசுவேன்!'

ராமலிங்க ராஜுவின் மோசடிக்குப் பின் சத்யத்தின் தொடர்ச்சியான தடுமாற்றத்தைப் பார்த்து, இனியும் தொடரலாமா வேண்டாமா என்ற தடுமாற்றத்திலிருந்தன சிட்டி வங்கி, ஜிஈ போன்ற பெரிய வாடிக்கையாளர்கள். இப்போது சத்யம் தங்கள் கைக்கு வந்துள்ளதால், அந் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் அனைவருடனும் தானே நேரடியாகப் பேசப் போவதாக டெக் மஹிந்திரா துணைத் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார்.

டெக் மஹிந்திராவுக்கு 4-வது இடம்!

இந்த ஏலத்தில் வென்றதன் மூலம் இந்திய ஐடி நிறுவனங்கள் வரிசையில் 4-வது பெரிய நிறுவனமாக உயர்ந்துள்ளது டெக்மஹிந்திரா.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+