2ம் கட்ட தேர்தல்-ஜார்க்கண்டில் குண்டுவீச்சு, மபியில் 4 அதிகாரிகள் மரணம்
இரண்டாம் கட்ட தேர்தல் மொத்தம் 12 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுகிறது. காலை தொடங்கிய வாக்குப் பதிவு மிதமான முறையில் நடந்து வருகிறது. மாலை 5 மணிக்கு வாக்குப் பதிவு முடியும். இருப்பினும் நக்சலைட் பாதித்த பீகார், ஜார்க்கண்ட் மாநில தொகுதிகளில் 3 மணிக்கே வாக்குப் பதிவு முடிந்து விடும்.
ஓட்டு போட்டார் பிரதமர்...
வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அஸ்ஸாமில் பிரதமர் மன்மோகன் சிங் இன்று வாக்களித்தார்.
அஸ்ஸாமில் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி குர்சரன் கெளருக்கு வாக்குரிமை உள்ளது. இம்மாநிலத்திலிருந்துதான் ராஜ்யசபா எம்.பியாக உள்ளார் மன்மோகன் சிங்.
இருப்பினும் கடந்த 2004, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த லோக்சபா மற்றும் சட்டசபைத் தேர்தல்களில் மன்மோகன் சிங் இங்கு வாக்களிக்க வரவில்லை.
இந்த நிலையில் இன்று நடந்த 2வது கட்ட தேர்தலில் அவர் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவியும் வந்து வாக்களித்தார். திஸ்பூர் அரசுப் பள்ளியில் பிரதமர் வாக்களித்தார். இதற்காக டெல்லியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் அஸ்ஸாம் வந்தார்.
தேர்தல் அதிகாரிகள் 4 பேர் மரணம்...
மத்திய பிரதேசத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்ட நான்கு அதிகாரிகள் மரணம் அடைந்தனர். வாக்குப்பதிவு முந்தைய நாள் போபால் வாக்குச்சாவடியில் இருந்த இரண்டு அதிகாரிகள் மரணமடைந்தனர். இன்று வாக்குப்பதிவின் போது ஷாதோல், ஹோசங்காபாத் பகுதிகளை சேர்ந்த தலா ஒரு அதிகாரிகள் இறந்தனர்.
இது குறித்து போபால் கூடுதல் தேர்தல் அதிகாரி சஞ்சய் பாண்டே கூறுகையில், இவர்களின் மறைவுக்கான காரணங்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை. அவரால் அதிக வெப்பம் மற்றும் உடல்நலக் கோளாறு காரணமாக இறந்திருக்கலாம் என்றார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நக்சல் தீவிரவாதிகள் வாக்குப்பதிவின் போது வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். கிரித் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீராம்பூர் கிராமத்துக்கு அருகில் தேர்தல் அதிகாரியும் நீதிபதியுமான நீதிபதி ராஜேந்திர பிரசாத்தின் வாகனத்தின் மீது இந்த வெடிகுண்டு வீசப்பட்டது.
இதில் தேய்டி மாவட்டத்துக்கு உள்ள வாக்குசாவடிக்கு சென்று கொண்டிருந்த நீதிபதிக்கும், அவரது பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஒருவரும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல் கிழக்கு சிங்பூம் மாவட்டத்தில் சிஆர்பிஎப் போலீசாரின் முகாமை நக்சல்கள் தாக்க முயன்றனர். அப்போது அவர்களுக்கு இடையே சுமார் 1 மணி நேரம் சண்டை நடந்தது. இதில் நக்சல்கள் பின் வாங்கி ஓடிவிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
11 இடங்களில் ஒரு ஓட்டு கூட பதிவாகவில்லை...
மத்திய பிரதேசத்தில் 11 வாக்குசாவடிகளில் இன்று காலை 11 மணி வரை வாக்காளர்கள் யாரும் ஓட்டுப்போட வரவில்லை. மின்சாரம், குடிநீர், அணை கட்டுதால் போன்ற காரணங்களுக்காக மக்கள் வாக்குப்பதிவை புறக்கணித்ததாக தெரிகிறது. இதை மத்திய பிரதேச கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியும் உறுதி செய்துள்ளார்.
இன்று தேர்தல் நடைபெறும் மாநிலங்களிலும், அவற்றின் தொகுதிகளும்..
ஆந்திரா 20, அஸ்ஸாம் 11, பீகார் 13, கோவா 2, ஜம்மு காஷ்மீர் 1, கர்நாடகா 17, மத்தியப் பிரதேசம் 13, மகாராஷ்டிரா 25, ஒரிசா 11, திரிபுரா 2, உ.பி. 17, ஜார்க்கண்ட் 9.
இவை தவிர ஆந்திர மாநில சட்டசபையின் 140 சீட்கள் மற்றும் ஒரிசாவின் 77 சீட்களுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்களில் சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு இன்றுடன் தேர்தல் முடிந்து விடும்.
மொத்தம் 121 பெண் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
ராகுல் காந்தி, சரத் பவார், ஜார்ஜ் பெர்னாண்டஸ், ராம் விலாஸ் பாஸ்வான், சுஷ்மா சுவராஜ் ஆகியோர் இன்றைய தேர்தலின் முக்கிய வேட்பாளர்கள் ஆவர்.