பிரபாகரனுக்கு ஆபத்து வர கூடாது-அத்தை மகள்
விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளையின் சகோதரி மகள் ஜானகி அம்மாள். 76 வயதாகும் இவர் தற்போது கொல்லத்தில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவரது கணவர் பரமேஸ்வரன் பிள்ளை.
தனது 22வது வயதில் குடும்பத்துடன் கொல்லம் வந்துள்ளார் ஜானகியம்மாள். முந்திரிப் பருப்பு சுத்திகரிக்கும் தொழிலை மேற்கொண்டுள்ளார்.
பிரபாகரன் ராணுவத்தால் முற்றுகையிடப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியால் அவர் வேதனையும், வருத்தமும் அடைந்துள்ளார்.
இதுகுறித்து ஜானகி அம்மாள் கூறுகையில், பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை ஒரு கடையில் வேலை செய்து வருவதாக நான் கொல்லம் வந்த சில வருடங்களுக்கு பிறகு கடிதம் எழுதி இருந்தார். பின்பு வேலுப்பிள்ளை இலங்கையில் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்த தகவலும் கிடைத்தது.
திருமணம் செய்த பின்பும் கூட எனது கொல்லம் முகவரிக்கு பணம் அனுப்புவார். கடிதமும் அனுப்புவார்.
வேலுப்பிள்ளைக்கு மொத்தம் 8 சகோதர, சகோதரிகள். அவர்களில் 6 பேர் பெண்கள். இவர்களில் நாணியம்மாளின் மகள்தான் நான்.
பிரபாகரன் பிறந்த ஒரு வருடத்தில் எனது மாமா வேலுப்பிள்ளை, மனைவியை பிரிந்து விட்டார். பின்னர் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பிரபாகரன் 10 வயது இருக்கும் போது, அவரது தந்தையுடன் எங்கள் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் எனது தாயார் இறந்ததற்கு கொல்லம் வந்திருந்தார். அதன்பிறகு பிரபாகரன் மற்றும் அவரது தந்தை இங்கு வரவே இல்லை.
பிரபாகரன் தொடர்பாக வரும் செய்திகளைக் கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பிரபாகரனுக்கு எதுவும் ஆகக் கூடாது என கடவுளை வேண்டி வருகிறேன்.
பிரபாகரனைப் பார்த்து 25 வருடங்களாகி விட்டது. இப்போதுதான் டிவிகளிலும், செய்தித் தாள்களிலும் பார்க்கிறேன். அவர் நலமுடன் வாழ வேண்டும். சண்டை, சச்சரவின்றி வாழ வேண்டும் என்று கூறியுள்ளார் ஜானகி அம்மாள்.