இலங்கை தாக்குதல்-ரெட்கிராஸ் ஊழியர், 100 பேர் பலி
கொழும்பு: இலங்கையில் பாதுகாப்பு பகுதியில் ராணுவத்தினர் குண்டுவீச்சு நடத்தியதில் சர்வதேச செஞ்சிலுவை சங்க ஊழியரும், அவரது தாயாரும் பலியானார்கள்.
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. ராணுவத்தின் தாக்குதலில் தினமும் நூற்றுக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பலியாகி வருகின்றனர். அதே சமயத்தில் ராணுவம் போர் பகுதியில் மட்டுமல்ல பாதுகாப்பு பகுதியில் இருக்கும் மருத்துவமனைகளில் கூட குண்டுவீசி வருகிறது.
இலங்கை ராணுவத்தின் தாக்குதல் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் தமிழர்களுக்கு நிவாரணப் பணி வழங்குவதில் செஞ்சிலுவை இயக்கம் ஈடுபட்டு வருகிறது.
100 தமிழர்கள் பலி...
இந்நிலையில் நேற்றுமுன்தினம் முல்லிவாய்க்கால் பகுதியில் இருந்த மருத்துவமனை ஒன்றில் இலங்கை ராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் மனநலம் பாதிக்கப்பட்ட 38 பெண்கள் உட்பட 65 பேர் பலியானார்கள்.
அருகிலிருக்கும் பகுதிகளில் நடந்த தாக்குதலில் மேலும் 35 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இதையடுத்து மொத்தம் பலியானவர்களி்ன் எண்ணிக்கை 100யை தாண்டியுள்ளது.
இதில் செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இவர்களை தவிர்த்து அந்த மருத்துவமனையின் டாக்டர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.
இது குறித்து இலங்கை செஞ்சிலுவை சங்க செய்தி தொடர்பாளர் சரசி விஜயரத்னே கூறுகையில், நேற்று மதியம் நடந்த குண்டுவீச்சுக்கு செஞ்சிலுவை சங்க ஊழியர் ஒருவரும், அவரது தாயாரும் பலியாகி உள்ளனர். அந்த ஊழியருக்கு வயது 31 இருக்கும் என்றார்.
இந்நிலையில் இலங்கை ராணுவம் நேற்றும் அதே மருத்துவமனை மீது மீண்டும் ஒரு கொடூர தாக்குதலை நடத்தியுள்ளது. இதில் பலியானவர்களின் எண்ணிக்கை தெரியவில்லை.