6 மாதங்களில் மறு குடியமர்த்தல்: நாராயணன், மேனனிடம் ராஜபக்சே உறுதி
அப்போது, இன்னும் 6 மாதங்களில் இடம் பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் அவரவர் இடங்களில் மீண்டும் குடியமர்த்தப்படுவார்கள் என்று ராஜபக்சே உறுதியளித்தார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள புதிய சூழ்நிலையின் பின்னணியில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணனும், வெளியுறவுத்துறை செயலாளர் மேனனும் கொழும்பு சென்றுள்ளனர்.
இன்று காலை அவர்கள் இருவரும் அதிபர் ராஜபக்சேவை அவரது வீட்டிற்கு செனறு சந்தித்தனர். அப்போது ராஜபக்சே இரு இந்தியத் தூதர்களுக்கும் விருந்தளித்தார்.
பின்னர் தமிழர்களின் புனர்வாழ்வு, அதிகாரப்பகிர்வு, சுயாட்சி உள்ளிட்டவை குறித்து விருந்து சாப்பிட்டபடியே மேனனும், நாராயணனும், ராஜபக்சேவுடன் ஆலோசனை நடத்தினர்.
இந்த சந்திப்பு குறித்து பின்னர் இலங்கை அரசு வெளியிட்ட அறிக்கை..
இந்திய அரசின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன், வெளியுறவு துறை செயலாளர் எஸ்.எஸ்.மேனன் ஆகியோர் அதிபர் மகிந்தா ராஜபக்சே, எம்.பி. பசில் ராஜபக்சே, அதிபரின் செயலாளர் லலித் வீரதுங்கா, பாதுகாப்புத்துறை செயலாளர் கோதபாயா ராஜபக்சே ஆகியோரை சந்தித்துப் பேசினர்.
மேலும் இலங்கையி்ல உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் அவர்கள் சந்தித்தனர்.
இலங்கையில் ராணுவ ரீதியிலான நடவடிக்கைகள் முடிந்து விட்டதை இரு தரப்பும் ஒத்துக் கொண்டன. மேலும், தற்போது மறு சீரமைப்பு, நிவாரணப் பணிகள், மறு குடியமர்த்தல், நிரந்தர அரசியல் தீர்வுக்கான ஆகிய தருணம் தற்போது வந்துள்ளதையும் இரு தரப்பும் ஏற்றுக் கொண்டன.
2008ம் ஆண்டு அக்டோபர் 26ம் தேதி இரு நாடுகளும் மேற்கொண்ட ஒப்பந்தப்படி, இலங்கையில் மனிதாபிமான நிவாரணப் பணிகளையும், இடம் பெயர்ந்தோருக்கான நிவாரணப் பணிகளையும் மேற்கொள்ள உறுதி பூணப்பட்டது.
கள மருத்துவமனையை அமைப்பது, அவசர கால மருந்துகளை அனுப்புவது, மருந்துப் பொருட்களை சப்ளை செய்வது, உணவு, உடை, கூடாரங்களுக்குத் தேவையான பொருட்களை இந்தியா வழங்க ஒப்புக் கொண்டுள்ளது.
இடம் பெயர்ந்த மக்களை அவர்களது கிராமங்களிலும், நகரங்களிலும் மீண்டும் குடியமர்த்த தேவையான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளவும் ஒப்புக் கொள்ளப்பட்டது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அவர்களது இயல்பு வாழ்க்கை திரும்ப நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டது.
தற்போது தற்காலிகமாக குடியமர்த்தப்பட்ட குடியிருப்புகள் அனைத்தும் இன்னும் 180 நாட்களில் விலக்கப்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் அவரவர் இருப்பிடங்களுக்கு மீண்டும் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக இந்திய அரசு உறுதியளித்துள்ளது.
கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் இந்தியா உதவத் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இனப் பிரச்சினைக்கு விரைவில் அரசியல் ரீதியலான நிரந்தரத் தீர்வைக் காணவும் இரு தரப்பும் ஒத்துக் கொண்டன. இதற்காக அரசியல் சட்டத்தின் 13வது சட்டத் திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதியாக இருப்பதாக இலங்கை அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின்போது இந்திய அரசு மறு சீரமைப்புக்காக தரும் பெரும் நிதியுதவிக்கும், பிற உதவிகளுக்கும் தாங்கள் நன்றிக் கடன் பட்டிருப்பதாக ராஜபக்சே, நாராயணன், மேனனிடம் தெரிவித்தார்.
மரணச் சான்றிதழ் கேட்கும் இந்தியா:
அதேபோல பிரபாகரன் மரணம் குறித்த மரணச் சான்றிதழ் (டெத் சர்டிபிகேட்) ஒன்றைத் தருமாறும் ராஜபக்சேவிடம் இந்தியத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டதாம்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த சான்றிதழ் தேவைப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளதாம்.