ஏர் பிரான்ஸ் விபத்து-மேலும் 15 உடல்கள் மீட்பு

சனிக்கிழமை 2 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் ஞாயி்ற்றுக்கிழமை மேலும் 15 உடல்களை பிரான்ஸ் மற்றும் பிரேசில் நாட்டு கடற்படையினர் மீட்டனர்.
ஒரு வாரத்துக்கு முன் கடந்த சனிக்கிழமை பிரேசிலில் இருந்து கிளம்பிய இந்த ஏர் பஸ் ஏ300 ரக விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானது. கிட்டத்தட்ட ஒரு வாரகாலமாக இந்த விமானத்தைத் தேடும் பணி நடந்தது.
ஆனால், நேற்று முன் தினம் தான் விமானம் விபத்துக்குள்ளான இடம் தெரிந்தது. பிரேசிலின் பெர்னான்டோ டி நேரோன்ஹா தீவுக்கு 640 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் இந்த விபத்து நடந்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் 70 கி.மீ. பரப்பளவுக்கு விமான பாகங்களும் பயணிகளின் உடல்களும் சிதறிக் கிடக்கின்றன. இதுவரை 4 ஆண்கள், 4 பெண்கள், ஒரு அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைந்து போன உடலை பிரேசில் கடற்படை மீட்டுள்ளது. மேலும் 8 உடல்களை பிரான்ஸ் கடற்பைட மீட்டுள்ளது.
மேலும் விமானத்தின் வால் பகுதி, 12 சிதறிய பாகங்கள், ஒரு இறக்கைத் துண்டு ஆகியவையும் மீட்கப்பட்டுள்ளன. மேலும் பயணிகளின் நூற்றுக்கணக்கான பெட்டிகளும் ஒரு லேப்டாப்பும், பயணச் சீட்டுகளும் மீட்கப்பட்டுள்ளன.
கடும் சூறாவளியை விமானம் கடந்து கொண்டிருந்தபோது, விமானத்தின் வேகத்தைக் காட்டும் சென்சாரில் ஐஸ் படிந்து, விமானம் அளவுக்கதிகமான வேகத்தில் சென்றதால் விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த சென்சாரில் குறைபாடு உள்ளதாகவும் அதை மாற்றுமாறு ஏர் பஸ் நிறுவனம் சமீபத்தில் அனைத்து விமான நிறுவனங்களையும் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications