ரயில்வே பட்ஜெட்-டிக்கெட் விலை உயருமா?
டெல்லி: ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜியின் பட்ஜெட்டில் மாணவர்களுக்கு ரூ. 20க்கு மாதாந்திர பாஸ், சரக்கு போக்குவரத்து சலுகைகள், தட்கல் கட்டண குறைப்பு என ஏகப்பட்ட சலுகைகள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
3ம் தேதி தாக்கலாக உள்ள இந்த பட்ஜெட்டில் பொருளாதார மந்தம் காரணமாக ரயில் டிக்கெட் விலைகள் சிறிய அளவில் உயர்த்தப்படும் என்றும் கூறப்படுகிறது.
பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த ஆண்டு சரக்கு போக்குவரத்து மூலம் கிடைத்த வருமானமும் குறைந்துவிட்டது. கட்டண குறைப்புகளால் ரூ. 3,000 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஆறாவது ஊதிய கமிஷனின் பரிந்துரை காரணமாக ஊழியர்களின் சம்பளத்துக்கு ரூ. 14,000 கோடி கூடுதலாக செலவிட வேண்டியுள்ளது.
இதனால் வருமானத்தை பெருக்கும் நோக்கத்தில் சரக்கு போக்குவரத்துக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படலாம்.
ஏழை எளிய மக்களின் வசதிக்காக விடப்பட்ட ஏழை ரதம் ரயில்களில் இனி அந்த பெயருடன் ஓடாது எனவும், ஆனால், அந்த ரயில்களின் கட்டணம் மேலும் குறைக்கப்படும் என்றும் தெரிகிறது.
முக்கிய ரயில் திட்டங்களில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு, மாணவர்கள் மற்றும் முதியவர்களுக்கு ரூ. 20க்கு மாதாந்திர பாஸ், ரயில்வே போலீசில் இருக்கும் காலியிடங்களை நிரப்புவது போன்ற அறிவிப்புகளும் வெளிவரும் என ரயில் நிர்வாக தகவல்கள் தெரிவித்துள்ளன.
ஜனதா சாப்பாடு நாடு முழுவதும் விரிவுப்படுத்தப்படும் என்றும், ரூ. 20க்கு மீன் சாப்பாடு, காய்கறி பிரியாணி, புரோட்டா மற்றும் பூரி வழங்குவது குறித்த அறிவிப்புகளும் இந்த பட்ஜெட்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்கவாட்டு மற்றும் மத்தி இருக்கைகளை அகற்றுவது, போர்ட்டர்கள் எண்ணிக்கை அதிகரிப்பது, செயற்கோள் உதவியுடன் ரயில்கள் வரும் இடத்தை துல்லியமாக தெரிந்து கொள்ளும் வசதி, தட்கல் கட்டணத்தை குறைப்பது போன்ற அறிவிப்புகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.