வீழ்ச்சியைக் கணிக்க தவறிவிட்டோம்!-பொருளாதார நிபுணர்கள்
சர்வதேச அளவில் பொருளாதாரத் துறைக்கு தலைமைப் பீடமாகப் பார்க்கப்படுவது லண்டன் பொருளாதாரப் பள்ளி (London School of Economics). உலகின் மிகச் சிறந்த பொருளாதார மேதைகள் உருவான இடம் இது. பொருளியலுக்கு புதுப்புது இலக்கணம் வகுத்த அறிஞர்கள் படித்து பின்னர் பணியாற்றிய கல்வி மையம்.
கடந்த நவம்பர் மாதம் இந்த பொருளாதார மையத்துக்கு வந்திருந்தார் பிரிட்டிஷ் மகாராணி.
அப்போது, 'இத்தனை சிறப்பு பெற்ற இந்த பள்ளியின் பொருளியல் அறிஞர்கள், பெருமந்தம் வருவதை முன் கூட்டி கணித்து தற்காப்பு நடவடிக்கையில் இறங்கத் தவறிவிட்டனர். அதுகுறித்து மகாராணி கேட்க வேண்டும்', என அப்ஸர்வர் நாளிதழ் எழுதியிருந்தது. ஆனால் அப்போது யாரும் இதற்கு பதில் தரவில்லை.
ஆனால் இத்தனை மாதங்கள் கழித்து, இந்த மையத்தில் பணியாற்றும் பேராசிரியர் டிம் பெஸ்லே (இங்கிலாந்து வங்கியின் பணவியல் கொள்கை கமிட்டி உறுப்பினர் இவர்) மற்றும் பொருளாதார அறிஞர்கள் இணைந்து சமீபத்தில் பிரிட்டிஷ் மகாராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளனர்.
அதில், உலகப் பொருளாதார வீழ்ச்சியை முன் கூட்டியே கணிக்க நாங்கள் தவறிவிட்டோம். இந்த உண்மையை ஆரம்பத்தில் நாங்கள் உணர்ந்தாலும், அதை ஒப்புக் கொள்ளாமல் இருந்தோம். இப்போது எங்கள் தவறு புரிகிறது, என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டின் துவக்கத்திலேயே இந்த வீழ்ச்சி பற்றிய சரியான கணிப்புகளை வெளிப்படுத்தியிருந்தால், நிச்சயம் இவ்வளவு பெரிய வீழ்ச்சியை பிரிட்டனும் உலகமும் சந்தித்திருந்திருக்காது, ஓரளவு தற்காப்பு முயற்சிகளில் இறங்க வாய்ப்பு கிடைத்திருக்கும், என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.