மொபைலில் ஆபாச படம்-நெல்லையில் 4 பேர் கைது
நெல்லை: திருநெல்வேலியில் செல்போன்களுக்கு ஆபாச படங்களை டவுன்லோடு செய்து கொடுக்கும் கடைகளில் அதிரடி சோதனை நடத்திய போலீசார் நான்கு பேரை கைது செய்தனர்.
திருநெல்வேலியில் பல மொபைல் சென்டர்களில் இணையதளத்திலிருந்து ஆபாச படங்கள் டவுன்லோடு செய்து விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தது. இதன் அடிப்படையில் போலீசார் அனைத்து செல்போன் கடைகளிலும் சோதனை நடத்தினர்.
இதில் ஒரு மொபைல் கடையில் ஆபாச படங்களை மாணவர்களுக்கு செல்போன்களில் பதிவு செய்து கொடுத்ததை அடுத்து போலீசார் கடை ஊழியர்கள் ரகுமான், முத்து, அப்துல்ரகுமான், முகமது சபீர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். கடை உரிமையாளர் நாதிர்ஷாவை தேடி வருகின்றனர்.
இதுகுறித்து திருநெல்வேலி டவுன் உதவி கமிஷனர் மகேந்திரன் கூறுகையில்,
நெல்லையில் உள்ள மொபைல் சென்டர்களில் சோதனை நடத்துவதற்காக தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கம்யூட்டரில் பயிற்சி பெற்ற போலீசார் அனைத்து கடைகளிலும் சோதனை செய்வார்கள்.
சில கடை ஊழியர்கள் போலீசார் கண்டுபிடித்து விடாமல் இருப்பதற்காக கம்யூட்டரில் உள்ள ஆபாச படங்களை டிவிடி மற்றும் பென் டிரைவ்களில் பதிந்து அவற்றை மறைத்து வைத்து கம்யூட்டரில் உள்ள படங்களை அழித்து விடுவது தெரிய வந்துள்ளது.
மேலும் சிலர் கம்யூட்டர்களில் கோட்வேர்டுகளை பயன்படுத்தி பிறர் பார்க்க முடியாதபடி லாக் செய்து விடுகின்றனர். இதனால் போலீசார் சோதனையின் போது அவற்றை கண்டுபிடிக்க முடியாமல் போய் விடும் என்று நம்புகின்றனர்.
இதைத் தவிர்க்க, சந்தேகிக்கப்படும் நிறுவன கம்யூட்டர்களின் ஹார்ட் டிஸ்குகளை முழுமையாக சோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.