ஈழத் தமிழர்களை காக்க செப். 2ல் ரயில் மறியல்-வீரமணி
சென்னை: இலங்கையில் முள்வேலி முகாம்களில் முடக்கப்பட்டு கிடக்கும் தமிழர்ர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும். அதை வலியுறுத்தி செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் தடையை மீறி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை..
கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு தொலைக்காட்சி, ஈழத்தமிழர்களை எப்படி எல்லாம் இலங்கை ராணுவத்தினர் சித்திரவதை செய்து கொன்றனர் என்ற உண்மையை உலகம் முழுவதும் ஒளிபரப்பியது.
இலங்கை மீது போர் அத்துமீறல் விசாரணை நடத்தவேண்டும் என்று நார்வே அமைச்சரும் முன்னாள் சமாதான சிறப்பு தூதருமான எரிக்சொல்ஹீமும் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் சிங்கள இனம் மட்டும் தான் இருக்க வேண்டும் என்ற நினைவில், அழிவு வேலையில் அவசர அவசரமாக ராஜபக்சே ஈடுபட்டு வருகிறார். போரில் பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்தது போதாது என்று முள்வேலிகளுக்குள் 3 லட்சம் தமிழர்களை முடக்கி மிருகத்தைவிட கேவலமாக நடத்துகிறார்கள்.
ராஜபக்சே தமிழர் என்ற இன அடையாளம் இலங்கையில் எந்த விதத்திலும் இருக்கக்கூடாது என்கிற முறையில் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். இதை தடுப்பதற்கான குரல் தமிழ்நாட்டில் இருந்து வெடித்து கிளம்பியே ஆகவேண்டும்.
வீதியில் இறங்கி நாம் நடத்தும் போராட்டம் மத்திய அரசையும் உலகத்தையும் தட்டி எழுப்பக்கூடியதாக இருக்க வேண்டும். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23ம் தேதி திராவிட கழகம் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடத்தி தமிழர்களின் போராட்ட உணர்வை தொடங்கிவைத்தோம்.
அதேபோல வருகிற 2ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தவேண்டிய அவசியத்திற்கு ஆளாகி இருக்கிறோம். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு முகாம்களில் முடங்கிக் கிடக்கும் தமிழர்களை உடனடியாக காப்பாற்ற வேண்டும். அவர்களின் வாழ்வுரிமை காப்பாற்றப்பட வேண்டும்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் வருகிற 2ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடைபெறும். இது கட்சி போராட்டமோ அரசியல் போராட்டமோ அல்ல. ஒரு இனத்தின் வாழ்வுரிமைக்கான அடிப்படை போராட்டம். எனவே தமிழர்கள் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும்.
வருகிற 2ம் தேதி காலை 10 மணிக்கு சென்னை பெரியார் திடலில் இருந்து எனது தலைமையில் போராட்ட வீரர்கள் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில் மறியலில் ஈடுபடுவார்கள்.
இந்த போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என்று நன்றாகவே தெரியும். ஆனாலும் தடையை மீறி போராட்டத்தை தொடருவோம் என அந்த அறிக்கையில் வீரமணி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications