விமானம் ஜாஸ்தி:ரயிலில் போங்கள்-சோனியாவுக்கு லாலு அறிவுரை
பாட்னா: விமான பயணம் என்பது சிக்கன நடவடிக்கை அல்ல. இந்த விஷயத்தில் சோனியா, மன்மோகன் சிங் ஆகியோர் மகாத்மா காந்தியை முன்னுதராணமாக நினைத்தால் ரயிலில் மூன்றாவது வகுப்பில் பயணம் செய்ய வேண்டும் என ராஷ்டீரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார்.
சிக்கன நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோர் விமானத்தில் சாதாரண வகுப்பில் பயணம் செய்ய துவங்கியுள்ளனர். இது குறித்து லாலு அடித்த கமண்ட் தான் அது.
லாலு பிரசாத் சுமார் 16 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தான் காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக வாயை திறந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் கூறுகையில்,
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பில் இருக்கும் சோனியா காந்தி, மன்மோகன் சிங், சபாநாயகர் மீரா குமார் ஆகியோர் காந்திய வழியை பின்பற்ற வேண்டும்.
அவரை போல் ரயிலில் முன்பதிவு செய்யாமல் செல்ல வேண்டும். பாதயாத்திரையாக நடந்து செல்ல வேண்டும். அவர்கள் காந்தியை மறக்கமாட்டார்கள் என்றால் இதை நிச்சயம் செய்வார்கள்.
சிக்கனமாக இருக்க வேண்டும் என அடுத்தவர்களுக்கு மட்டும் கூறுவதில் எந்த பலனும் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் முதலில் செய்தால் அவர்களது தொண்டர்களும் அதை தொடர்வார்கள்.
காங்கிரஸ்காரர்கள் மூன்றாவது பெட்டியில் பயணம் செய்தால் ரயில்வேயின் வருமானமும் உயரும். மத்திய அமைச்சர்களும், மாநில அமைச்சர்களும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் விமான பயணத்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்வது தான் நாட்டுக்கு நல்லது.
நான் கேலி செய்யும் விதமாக இதை கூறவில்லை. உணர்வுபூர்வமாகவும், ஆக்கபூர்வமாகவும் சொல்கிறேன்.
எனக்கு கதர் கலாச்சாரத்தில் மிகுந்த நம்பிக்கை உண்டு. காந்தியின் கொள்கைகளில் பிடிப்பு கொண்டவன். எளிமையி்ன் காரணமாக நான் புகழ் பெற்றவன் என்பதை சொல்ல தேவையில்லை என்றார்.
ராகுல் ரயில் மீது கல்வீச்சு...
இந்நிலையில் நேற்று காலை காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி இளைஞர் காங்கிரஸ் முகாம் ஒன்றை துவக்க சதாப்தி எக்ஸ்பிரஸ் மூலம் டெல்லியிலிருந்து லூதியானா சென்றார்.
அவர் ரயிலில் சாதாரண வகுப்பில் பிரயாணம் செய்தார். மேலும் ரயில் நிலையத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட மலர்சென்டையும் வாங்கை மறுத்துவிட்டார். அது சிறப்பு வகுப்பில் பயணம் செய்பவர்களுக்கு வழங்கப்பட வேண்டு்ம் என்பதால் சாதாரண வகுப்பில் பயணம் செய்யும் அவர் அதை பெற்றுக்கொள்ளவில்லை.
அதே போல் மற்ற பயணிகளுக்கு கொடுக்கப்படும் பிளாஸ்டிக் டம்ளரில் தனக்கும் தண்ணீர் கொடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். ராகுல் காந்தி தங்களுடன் பயணம் செய்வதை கண்டு சகபயணிகள் உற்சாகம் அடைந்தனர்.
பின்னர் அவர் விழாவில் கலந்து கொண்டு டெல்லி திரும்பி கொண்டிருந்தார். ரயில் இரவு சுமார் 9.45 மணிக்கு ஹரியானா மாநிலம் பானிபட் அருகே கருன்டா ரயில் நிலையத்துக்கு வந்த போது அந்த ரயில் மீது திடீரென கல் வீசப்பட்டது.
ரயிலின் சி2, சி4 மற்றும் சி7 பெட்டிகள் மீது கற்கள் விழுந்தன. அதில் ஒரு கல் ஜன்னலை உடைத்து கொண்டு பெட்டிக்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ராகுல் காந்தி சி3 பெட்டியில் வந்தார்.
இது குறித்து அப்பகுதி ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யாரவது சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக வீசியிருக்கலாம் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ரயில் இரவு 11.20 மணிக்கு டெல்லி வந்தது. ராகுல் காந்தி பலத்த பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டார்.
ராகுல் சமத்து...மம்தா பாராட்டு...
இந்நிலையில் ரயிலில் சாதாரண பெட்டியில் பயணம் செய்த ராகுலுக்கு மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,
ராகுல் காந்தி செய்தது மிகப்பெரிய விஷயம். அவர் நல்ல துடிப்பான இளைஞர். மகாத்மா காந்தி மாதிரி பயணம் செய்ய வேண்டும் என கூறிய லாலு தான் முதலில் அவ்வாறு செய்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்பேன். மத்திய அமைச்சர்கள் செய்யும் சிறப்பு பெட்டியில் கூட அவர் பயணம் செய்தது கிடையாது என்றார்.
சாதாரண வகுப்பில் சென்ற ராசா:
இந் நிலையில் மந்திரி அமைச்சர் ராசா இன்று டெல்லிக்கு விமானத்தில் சாதாரண வகுப்பில் சென்றார். அதே நேரத்தில் அதிமுக எம்பி மைத்ரேயன் பிஸினஸ் கிளாசில் பயணித்தார்.