திருச்செந்தூர்: 35,000 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி-அழகிரி சபதம்
மதுரையில் நேற்று தாய் மூகாம்பிகை திருமண மண்டபத்தில் மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அதில் பங்கேற்ற திமுக தென்மண்டல அமைப்பு செயலாளரும், மத்திய ரசாயன துறை அமைச்சருமான அழகிரி கூறுகையில்,
அமைச்சரான பின்னர் என்னை சந்திக்க முடியவில்லை என்ற தவறான எண்ணம் கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. மதுரையில் இருக்கும் போதெல்லாம் மக்களை சந்தித்துக் கொண்டு இருக்கிறேன். மனுக்களை வாங்கி கொண்டும், அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்திக் கொண்டும் தான் இருக்கிறேன்.
தமிழக அரசு முதியோர், ஊனமுற்றோர், விதவைகளுக்கு வழங்கி வரும் திட்டங்கள் பற்றி மக்களுக்கு முழுமையாக தெரியவில்லை. அமைச்சரான பின்னர் சுமார் 4 ஆயிரம் பேருக்கு உதவித் தொகைகளை வாங்கிக் கொடுத்து உள்ளேன்.
காஞ்சிபுரத்துக்கு வர வேண்டும்...
பொதுவாக திமுக நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் நிர்வாகிகள் தவறாது கலந்து கொள்ள வேண்டும். காஞ்சிபுரத்தில் நடைபெறவுள்ள அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் மதுரை மாநகர், புறநகர் மாவட்ட திமுக சார்பில் நிர்வாகிகளும், தொண்டர்களும் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு பங்கேற்காத நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கலந்துகொள்ள முடியாதவர்கள் தங்களது சூழ்நிலையையும் அதற்குரிய காரணத்தையும் மாவட்டச் செயலரிடம் முன்னதாகவே தெரிவிக்க வேண்டும்.
உழைப்பவர்களுக்கு தான் பதவி...
கட்சி பணிக்காக உழைப்பவர்கள் தான் பதவியில் இருக்க முடியும். பதவிக்காக யாரும் கட்சியில் இருக்கக் கூடாது.
இடைத்தேர்தலில் கம்பம் தொகுதியில் சுமார் 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றோம். அதிமுகவினரும் நமக்கு வாக்களித்து இருக்கிறார்கள். இதற்கு அரசின் சாதனையே காரணம். எனவே அரசின் சாதனைகளை மக்களுக்கு நாம் கொண்டு செல்ல வேண்டும்.
திமுக மக்கள் பிரதிநிதிகளும், கட்சிப் பதவியில் இருப்பவர்களும் தினமும் மக்களை சந்திக்க வேண்டும். அவர்களின் குறைகளை கேட்டு சரி செய்து தர வேண்டும்.
கட்சி மற்றும் ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் வார்டு வாரியாக சென்று குறைகளை கேட்டு தீர்த்தால் தான், அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவை பெற முடியும். அதே போன்று ஒவ்வொரு கட்சி நிகழ்ச்சிகளிலும் நிர்வாகிகள் தவறாமல் பங்கேற்க வேண்டும்.
அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சியில் 30 கவுன்சிலர்கள் வரவில்லை. இந்த கூட்டத்திற்கு கூட நான்கு வட்டச் செயலர்கள் வரவில்லை. அவர்களிடம் விளக்கம் கேட்கப்படும் நடைபெற உள்ள திருச்செந்தூர் இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடுவதாக தகவல் கிடைத்துள்ளது. அங்கு யார் போட்டியிட்டாலும் திமுக தான் வெற்றிபெறும். சுமார் 35 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி.
இதற்காக உழைக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும். 2011 சட்டசபை தேர்தலில் தென்மாவட்டங்களில் இருக்கும் 60 தொகுதிகளிலும் திமுக தான் வெற்றி பெறும் என்றார் அழகிரி.