பல பெண்கள் வாழ்ககையில் விளையாடிய வேல்முருகன்-திடுக் தகவல்
சென்னை: சென்னை தாய்-மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேட்டுபாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்த வேல்முருகன் பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவர் என்றும் அதில் ஒன்று தான் இந்த சம்பவம் என்றும் தெரியவந்துள்ளது.
சென்னை அசோக்நகர் போஸ்டல் காலனியை சேர்ந்த ராமசுப்பிரமணியத்தின் மனைவி அனந்தலட்சுமி மற்றும் அவரது மகன் சூரஜ் ஆகிய இருவரும் சில நாட்களுக்கு முன்னர் வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தனர்.
அவருக்கு மொபைலுக்கு வந்த அழைப்பு எண்களை வைத்து போலீஸார் விசாரித்ததில் ராமசுப்பிரமணியத்தின் நண்பர் வேல்முருகன் என்பவர் அனந்தலட்சுமிக்கு அடிக்கடி போன் செய்தது தெரிய வந்துள்ளது.
மேலும், வேல்முருகனின் மொபைல் போன், கொலையான தினத்தில் அசோக் நகர் பகுதியில் அடிக்கடி இருந்ததை தொலைபேசி டவர் காட்டி கொடுத்தது. இந்த தகவலை போலீஸார் விசாரணைக்காக அவர் பயன்படுத்திய மொபைல் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளனர்.
இதையடுத்து போலீஸார் அவரிடம் விசாரணை செய்ய முயன்றனர். ஆனால், அவர் போலீஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் போலீஸார் தென்காசியிலிருந்த வேல்முருகனின் தந்தை பத்மநாபன் என்பவரையும், அவரது தம்பியையும் சென்னைக்கு அழைத்து வந்தனர்.
மேலும், கேரளாவிலிருக்கும் வேல்முருகனின் காதலி தானியாவை சென்று சந்தித்தனர். அப்போது தானியா வேல்முருகன் தன்னிடம் ரூ. 30 ஆயிரத்தை அனந்தலட்சுமி கொலையான மறுநாள் கொண்டு வந்து கொடுத்ததாக தெரிந்தது. இதையடுத்து போலீஸாருக்கு அவர் மீதான சந்தேகம் கிட்டதட்ட உறுதியானது.
மேலும், அனந்தலட்சுமியின் 15 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் பணமும் காணாமல் போயிருப்பதால் அவர் தான் பணத்துக்காக கொலை செய்திருக்க வேண்டும் என போலீஸார் எளிதாக கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் வேல்முருகன் நேற்று முன்தினம் மேட்டுபாளையம் நீதிமன்றத்தில் தினேஷ் என்ற வக்கீல் மூலம் சரணடைந்தார். அவர் நீதிபதியிடம் இந்த வழக்கு தொடர்பாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த வாக்குமூலம் இதுவரை வெளியிடப்படவில்லை. அவரை நீதிபதி 15 நாட்கள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
அவர் நீதிபதியிடம் உண்மையை ஒப்புகொண்டார் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதில், அனந்தலட்சுமி ரூ. 30 ஆயிரம் தருவதாக கூறியதை அடுத்து வேல்முருகன் அதை வாங்க சென்றதாகவும், ஆனால் அவர் பணம் கொடுக்காமல் எடுத்து எறிந்து பேசியதால் ஆத்திரமடைந்து தள்ளிவிட்டதில் அனந்தலட்சுமி சுவற்றில் மோதி மயங்கியுள்ளார்.
மயக்கம் தெளிந்து போலீஸில் புகார் கொடுத்துவிடுவார் என்ற பயத்தில் அவரை வேல்முருகன் கொன்றதாகவும், அதை பார்த்த அவரது மகனையும் கொன்றுவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.
ஆனால், சில செய்திகள் அவர் கொலை செய்யவில்லை என மறுத்துவிட்டதாக கூறுகிறது. ஆனால், எதுவும் உறுதியாகவில்லை.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில்,
வேல்முருகனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பது குறித்து 5ம் தேதி சைதாப்பேட்டை நீதமின்றத்தில் அனுமதி கோரப்படும்.
வேல்முருகன் மேட்டுபாளையம் நீதிபதியிடம் என்ன சொன்னார் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், அவர் தான் குற்றவாளி என்பதை நிரூபிக்க போதிய ஆதாரம் உள்ளது.
கொலையான இடத்தில் ரத்த சிந்தி கிடந்த ஒரு இடத்தில் கொலையாளியின் கால் தடம் உள்ளது. மேலும் 5 இடங்களில் கைரேகை பதிவாகியுள்ளது. திருடப்பட்ட ஆனந்தலட்சுமியின் நகை கிடைத்தால் அதிலிருந்தும் நல்ல ஆதாரம் கிடைக்கும்.
பிஎஸ்சி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு சென்னை வந்த வேல்முருகன் பெண்கள் விஷயத்தில் மிகவும் மோசமானவன். அவன் ஆனந்தலட்சுமியின் வாழ்க்கைக்குள் நுழைந்த பின்னர் அது சூன்யமாகிவிட்டது.
நாங்கள் செய்த விசாரணையில் அவன் மேலும் பல பெண்களின் வாழ்க்கையில் சிக்கலை உண்டாக்கியிருப்பதும் தெரியவந்துள்ளது. வேல்முருகன் வாயில் இருந்து உண்மையை வரவழைக்க 50 கேள்விகளை தயார் செய்து வைத்திருக்கிறோம். இதிலிருந்து அவர் தப்ப முடியாது.
வேல்முருகனின் தந்தை ஒரு தறுதலையை பெற்றுவிட்டன் என வருத்தப்பட்டார். அவர் விசாரணைக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார் என்றார்.
சென்னை போலீஸார் வேல்முருகனை காவலில் எடுத்து விசாரித்த பின்னர்தான் அனந்தலட்சுமி - சூரஜ் கொலை வழக்கின் உண்மையான பின்னணி என்ன என்பது தெரிய வரும்.