வருகிறது ஆசியாவின் காஸ்ட்லி ரயில் - மகாராஜா எக்ஸ்பிரஸ்
தொடக்கத்தில் மும்பை - டெல்லி, டெல்லி - கொல்கத்தா இடையே இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஆசியாவிலேயே இந்த ரயில் காஸ்ட்லியானது என பெருமை பெறவுள்ளது. இதன் சோதனை ஓட்டம் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதையடுத்து 2010ம் ஆண்டு ஜனவரி மாதம் மும்பை- டெல்லி சேவை தொடங்குகிறது.
இதுகுறித்து இந்திய ரயில்வே சுற்றுலாக் கழக நிர்வாக இயக்குநர் ஆர்.டான்டன் கூறுகையில், இந்திய ரயில்வே சமையல் மற்றும் சுற்றுலாக் கழகம் சொகுசு ரயில் ஒன்றை இயக்கவிருப்பது இதுவே முதல் முறையாகும். காக்ஸ் அன்ட் கிங்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த சேவையை மேர்கொள்ளவுள்ளோம்.
இதன் குறைந்தபட்சக் கட்டணமாக ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு 800 டாலர்கள் (அதாவது ரூ. 38,056) என நிர்ணயித்துள்ளோம். அதிகபட்ச கட்டணம் 2500 டாலர்களாக (ரூ. 1,18,925), என நிர்ணயித்துள்ளோம்.
இந்த ரயிலில் பிரசிடென்ஷியல் சூட் (ரூ. 1,18,925), சூட் (ரூ 66,598), டீலக்ஸ் கேபின் (ரூ. 42,813), ஜூனியர் சூட் (ரூ. 38,056) என நான்கு கேரேஜுகள் இடம் பெறும். இந்த ரயிலில் இரு ரெஸ்டாரன்டுகள் (ஹவேலி, பீகாக்) மற்றும் ஒரு பார் (மசான்) ஆகியவையும் இடம் பெறும். இவற்றைப் பராமரிக்க ஒரு முக்கிய ஹோட்டலை அணுகியுள்ளோம்.
7 ஸ்டார் ஹோட்டலின் அனைத்து அம்சங்களும் இந்த ரயிலில் இடம் பெற்றிருக்கும். இந்தியாவின் முக்கிய கலாச்சாரங்களை அறிமுகப்படுத்தும் ரயிலாக இது அமையும்.
சுற்றுச்சூழல் பாதிப்பில்லாத டாய்லெட்டுகள், டிவி, இன்டர்நெட், திரைப்படங்கள், நேரடி தொலைபேசி வசதி, ஏசி உள்ளிட்டவை இடம் பெறும்.
மொத்தம் 23 ஏசி கோச்சுகள் இதில் இடம் பெறவுள்ளன. மொத்த பயண நாட்கள் ஏழு பகல் மற்றும் ஆறு இரவுகள் ஆகும்.
ஜனவரி 9ம் தேதி மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து கிளம்பி வதோதரா, உதய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், ஜெய்ப்பூர், ரந்தம்போர், ஆக்ரா வழியாக இந்த ரயில் டெல்லியை சென்றடையும். மும்பைக்கு ஜனவரி 17ம் தேதி கிளம்பி வரும்.
மும்பை - டெல்லி இடையிலான பயணத்திற்கு பிரின்ஸ்லி இந்தியா ஜர்னி என பெயரிடப்பட்டுள்ளது. அதேபோல ரிட்டர்ன் பயணத்திற்கு ராயல் இந்தியா டூர் என பெயரிடப்பட்டுள்ளது.
தொடக்க ரயிலுக்கான புக்கிங்குக்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளது என்றார்.
டெல்லி- கொல்கத்தா ரயில் ஆக்ரா, குவாலியர், கஜூராஹோ, பந்தவ்கர், வாரணாசி, கயா இடையே இயங்கும். டெல்லி- கொல்கத்தா ரயிலுக்கு கிளாசிகல் இந்தியா ஜர்னி எனவும், ரிட்டர்ன் பயணத்திற்கு செலசியல் இந்தியா டூர் எனவும் பெயரிட்டுள்ளனர்.
இந்த ரயில் அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையில் இயங்குமாம். மற்ற நேரங்களில் இதை வாடகைக்கு விடுவார்களாம்.
எல்லாம் சரி, இந்த மகாராஜா சர்வீஸ் ஏன் சென்னைக்கு மட்டும் இல்லை...? சென்னையில் பிச்சைக்காரர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள் என்று ரயில்வே நினைத்து விட்டதா???