தீபாவளி ஸ்வீட்-மருத்துவமனையில் குவிந்த நீரிழிவு நோயாளிகள்!
இப்போது தடுக்கி விழுந்தால் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் என்றாகி விட்டது. பணக்கார வியாதியாக கருதப்பட்ட சர்க்கரை வியாதி என்று பாரபட்சமே இல்லாமல் அனைவரையும் தாக்க ஆரம்பித்து விட்டது.
உணவுக் கட்டுப்பாடு, குறிப்பாக நாவடக்கம் மட்டுமே சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள ஒரே மருந்தாக உள்ளது. இருப்பினும் அவ்வப்போது, வாய்ப்பு கிடைக்கும்போது இனிப்புகளை ஒரு கை பார்த்து விடுகிறார்கள் சர்க்கரை நோயாளிகள். பின்னர் கஷ்டப்படுகிறார்கள்.
சமீபத்தில் முடிந்த தீபாவளிப் பண்டிகையின்போது வீடுகளில் செய்யப்பட்ட இனிப்பு வகைகளை சர்க்கரை வியாதியஸ்தர்களும் கட்டுப்பாட்டைத் தளர்த்திக் கொண்டு ஒரு கை பிடித்து இப்போது அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு வரும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையிலிருந்து இது தெரிகிறது. நேற்று சென்னை அரசு மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளுக்கு பெருமளவில் சர்க்கரை நோயாளிகள் வந்துள்ளனர்.
அதேபோல தனியார் மருத்துவமனைகளுக்கும் அதிகம் பேர் வந்துள்ளனர்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்ட சர்க்கரை நோயாளிகள் வருவது வழக்கம். பொதுவாக, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் உணவு கட்டுப்பாட்டை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.
ஆனால் அதை காற்றில் பறக்க விட்டு, தீபாவளி பண்டிகையன்று இனிப்பு பதார்த்தங்களை சாப்பிட்டுள்ளனர். இதனால், அவர்களுக்கு சர்க்கரை அளவு கூடி உள்ளது. இதனால் ஏராளமானோர் வந்துள்ளனர்.
வந்தவர்களில் 60 முதல் 70 சதவீதம் பேருக்கு சர்க்கரை அளவு அதிகமாக இருந்தது. அவர்களுக்கு இன்சுலின் ஊசி மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டன என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.