ஹரியாணா: சுயேச்சைகள் உதவியோடு ஆட்சி அமைக்கும் காங்!
சண்டீகர்: ஹரியாணாவில் சட்டமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் ஆட்சியமைக்க காங்கிரஸ் மற்றும் ஓம் பிரகாஷ் செளதாலாவின் இந்திய தேசிய லோக் தள் கடும் போட்டி எழுந்துள்ளது.
மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் காங்கிரஸ் 40 இடங்களிலும், இந்திய தேசிய லோக் தள் 31 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. லோக் தள்ளின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.
முதன்முறையாக தேர்தலில் களமிறங்கிய முன்னாள் முதல்வர் பஜன்லாலின் ஹரியாணா ஜனஹித் காங்கிரஸ் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 4 இடங்களில் வென்றுள்ளது.
ஆட்சியமைக்க 46 இடங்கள் தேவை என்ற நிலையில் காங்கிரசும் லோக் தள் கட்சியும் 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ள சுயேச்சைகளை வளைக்க தீவிரம் காட்டின.
செளதாலாவுக்கு பாஜக ஆதரவு தரத் தயாராக இருந்தாலும் பஜன் லால் ஆதரவு கிடைப்பது கஷ்டம். அதே நேரத்தில் ஆதரவு கோரி பஜன் லாலின் மகன் பிஷ்னாயுடன் காங்கிரஸ் பேச்சு நடத்த ஆரம்பித்தது.
மேலும் அதிகபட்ச சுயேச்சைகளை வளைப்பவரே ஆட்சிக்கு வர முடியும் என்ற நிலையில் முதல்வர் பூபிந்தர்சிங் ஹூடா, அவர்களுடன் தனித்தனியே பேச்சு நடத்தினார்.
இதற்கிடையே செளதாலா பாஜக மற்றும் சுயேச்சைகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கப் போவதாக அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுயேச்சைகளை வளைக்க காங்கிரசும் தீவிரம் காட்டுவதால் குதிரை பேரம் ஆரம்பித்தது.
இந் நிலையில் நேற்றிரவு முதல்வர் ஹூடாவை 6 சுயேச்சை எம்எல்ஏக்களும் சந்தித்துப் காங்கிரஸ் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக அறிவித்து, கடிதமும் தந்தனர்.
இதைத் தொடர்ந்து ஹூடா ஆட்சி அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இன்று காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் பூல்சந்த் முல்லானாவுடன் ஆளுநர் ஜகன்னாத் பாடியாவைச் சந்தித்த ஹூடா 6 சுயேச்சைகள் உள்பட 46 எம்எல்ஏக்களின் கடிதங்களை கவர்னரிடம் வழங்கினார்.
கடந்த தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற லோக் தளம் இம்முறை பாஜவை வெட்டிவிட்டுவிட்டு தனித்துப் போட்டியிட்டு 31 தொகுதிகளில் வென்றுள்ளதன் மூலம் அதன் தலைவர் ஓம்பிரகாஷ் செளதாலாவுக்கு அரசியல் மறுவாழ்வு ஏற்பட்டுள்ளது.
முன்னாள் துணைப் பிரதமர் தேவிலாலின் மகனான இவர் மீண்டும் காங்கிரசுக்கு எதிராக தேசிய அளவில் அணியை உருவாக்குவதில் முனைப்பு காட்டுவார் என்று தெரிகிறது.
அருணாசல்-காங்கிரஸ் பெரும் வெற்றி:
அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தில் சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுன் கூட்டணி அமைத்த காங்கிரஸ மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது.
அதே போல அருணாசல் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கிறது.
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 42ல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
மத்தியில் காங்கிரஸின் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக இம்மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் 26 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு போட்டியிட்டு 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
அதே போல பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 36 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்டு 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இதனால் முதல்வர் டோர்ஜீ தலைமையி்ல் காங்கிரசே இங்கு மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது.