தீவிரமானது வட கிழக்குப் பருவ மழை!-தொடர்ந்து கன மழை பெய்யும்!!
பருவ மழைக்கு முன்னோட்டமாக கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந் நிலையில் வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் வலுவடைந்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்தி்ல கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் குழந்தைவேலு வெளியிட்டுள்ள அறிக்கை...
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய பகுதிகளில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. கடலோரத் தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளது.
கடலோரத் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும், உள்புற தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
கொள்ளிடத்தில் அதிகபட்சமாக 7 செமீ மழை பெய்துள்ளது.
செங்கல்பட்டு, செஞ்சி ஆகிய இடங்களில் 6 செமீ, ஸ்ரீபெரும்புதூர், கடலூர், புதுச்சேரி, திருவாரூர், சீர்காழி ஆகிய இடங்களில் தலா 5, சென்னை, உத்திரமேரூர், சோழவரம், செம்பரம்பாக்கம், தாமரைப்பாக்கம் சிதம்பரம், வானூர், முத்துப்பேட்டை, ராமநாதபுரம், சாத்தான்குளம், கொடைக்கானல் ஆகிய இடங்களில் தலா 4 செமீ, சென்னை விமான நிலையம், செய்யூர், காஞ்சிபுரம், தாம்பரம், திருவள்ளூர், பரங்கிப்பேட்டை, விருத்தாச்சலம், விழுப்புரம், மயிலாடுதுறை ஆகிய இடங்களில் தலா 3 செமீ, மதுராந்தகம், காட்டுமன்னார் கோவில், காரைக்கால், திருத்துறைப்பூம்டி, நாகை, தொண்டி, ராமேஸ்வரம், ராதாபுரம், சிவகிரி, தூத்துக்குடி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் தலா 2 செமீ மழை பெய்துள்ளது.
31ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு...
கடலோரத் தமிழகத்தில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். உள்புற தமிழகத்திலும் சில இடங்களில் மழைக்கான வாய்ப்பு உண்டு.
அடுத்த 48 மணி நேரத்தில் கடலோரத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஓரிரு இடங்களி்ல கன மழைக்கு வாய்ப்புண்டு.
சென்னை...
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் பொதுவாக மேகமூட்டம் காணப்படும். ஓரிரு இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் பல இடங்களில் மிதமானது முதல் கன மழை பெய்யும் வாய்ப்புண்டு.
தமிழகத்தின் பிற பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புண்டு.
வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந் தேதி தொடங்கி டிசம்பர் 15-ந் தேதி வரை 55 நாட்களுக்கு நீடிக்கும். ஆனால் இந்த ஆண்டு தாமதமாக 29ம் தேதி தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மழையால் தெற்கு ஆந்திர கடற்கரை முதல் தமிழ்நாடு கடலோர பகுதிகள், கேரள கடலோர பகுதிகள், கர்நாடகத்தின் தெற்கு உள்பகுதி ஆகிய இடங்கள் பலன் பெறும். இந்த ஆண்டு இயல்பான மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்துள்ளது.
வடிவேலு வீட்டு மரம் சாய்ந்தது...
இதற்கிடையே, நேற்று இரவு சென்னை நகரில் பலத்த மழை கொட்டியது. இதனால் நகரின் பல இடங்களில் தண்ணீர் வெள்ளம் போல ஓடியது. ஏராளமான மரங்களும் சாய்ந்தன.
நேற்று மாலைக்கு மேல்தான் சென்னை நகரில் நல்ல மழை பெய்தது. இடி மின்னலுடன் பெய்த இந்த மழையால் நகரமே வெள்ளக்காடாக மாறியது.
வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அலுவலகம், பள்ளி, கல்லூரி முடிந்து திரும்பியோர் பெரும் சிரமத்திற்குள்ளாகினர்.
விருகம்பாக்கத்தில் நடிகர் வீட்டு முன்பு இருந்த பெரிய மரம் சாய்ந்து விழுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தின் ஒரு பகுதி மதில் சுவர் இடிந்து கார் ஒன்றின் மீது விழுந்தது.
இதேபோல நகரின் பல பகுதிகளிலும் மரங்கள் சாய்ந்தன.
சேற்றில் மிதக்கும் புறநகர்கள்..
இதற்கிடையே சென்னை புறநகர்ப் பகுதிகள் பலவற்றிலும் பாதாளச் சாக்கடை, மழை நீர் வடிகால் கால்வாய் தோண்டும் பணிகளுக்கு வெட்டி வைக்கப்பட்ட பள்ளங்களால் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
இந்த இடங்கள் அனைத்தும் மழை நீரால் சேறும், சகதியுமாக மாறி விட்டன. இதனால் நடந்த கூட போக முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது.
முகப்பேர் உள்ளிட்ட பகுதிகள் மழை நீர் சேறு காரணமாக நடக்கக் கூட முடியாமல் சிரமப்படும் நிலை உள்ளது. இந்தப் பணிகளை வேகமாக தொடங்கி வேகமாக முடிக்காத அதிகாரிகள் மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர்.
இன்றைய நிலவரம்...
சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் காலையில் லேசான தூறல் மழை இருந்தது. தற்போது லேசான வெயில் அடித்து வருகிறது. வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
குமரியில் கடல் சீற்றம்:
குமரி மாவட்டம் முழுவதும் நேற்று இரவு விடிய விடிய பலத்த மழை பெய்தது.
நாகர்கோவில், சுருளோடு, பூதபாண்டி, கன்னிமார், மயிலாடி, ஆரல்வாய்மொழி, தக்கலை, உள்பட பல பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. இதனால் நாகர்கோவில் செம்மாங்குடி ரோடு, கோட்டாறு, செட்டிகுளம், மகளிர் கிறிஸ்தவ கல்லூரி பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. விடிய, விடிய பெய்த மழையால் வெப்பம தணிந்து குளிர் காற்று வீசத்தொடங்கியது.
பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் குடையை பிடித்து பள்ளிக்கு சென்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளானார்கள்.
மழையுடன் சூரைகாற்றும் வீசி வருவதால் கடலோர பகுதிகளில் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. பெரும்பாலான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை.
கட்டிட தொழிலாளிகள் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்தனர். குலசேகரம், கீரிப்பாறை, திருவட்டார் பகுதிகளில் ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டது. மேலும் திர்பரப்பு அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டுகிறது. தொடர்ந்து பலத்த மழை பெய்து வருவதை அடுத்து நீரை சேமிப்பதற்காக பெருச்சாணி அணை இன்று காலை மூடப்பட்டது.