பொன்சேகாவை விசாரிக்காமல் அனுப்பிய அமெரிக்கா
ஈழப் போரின் இறுதி நாட்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், பாதுகாப்புத்துறைச் செயலாளர் கோத்தபயா ராஜபக்சேவுக்கு எதிரான ஆதாரங்கள் ஆகியவை தொடர்பாக சாட்சியம் அளிக்குமாறு அமெரிக்கா சென்றிருந்த பொன்சேகாவுக்கு அந்த நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கோரிக்கை விடுத்திருந்தது.
நேற்று விசாரணைக்கு வருமாறும் அழைத்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இலங்கை அரசு அதைத் தடுத்து நிறுத்த கடுமையாக முயன்றது. மேலும், அமெரிக்க விசாரணைக்குப் போக வேண்டாம் என்றும், கோத்தபயாவுக்கு எதிராக சாட்சியம் அளிக்க வேண்டாம் என்றும் பொன்சேகாவை வலியுறுத்தியது.
பொன்சேகாவும், எனது சுய நலனுக்காக யாரையும் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று விசாரணைக்குஅவர் போகவில்லை. மாறாக அமெரிக்காவை விட்டே கிளம்பிச் சென்று விட்டார். இன்று அவர் கொழும்பு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓக்லகாமாவில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த பொன்சேகா, அங்கிருந்து நாடு கிளம்புவதற்கு முன்பு எந்தவித விசாரணைக்கும் அவர் உட்படுத்தப்படவில்லை என்று இலங்கை வெளியுறவு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
ஆனால் பொன்சேகாவை அமெரிக்க அரசு விசாரணைக்கு உட்படுத்தாததற்குக் காரணம் இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா, அமெரிக்க தூதர் புட்டனிஸிடம் இதுகுறித்து வலியுறுத்திக் கேட்டுக் கொண்டதால்தான் என்று கூறப்படுகிறது.
மேலும், இலங்கை ராணுவத் தளபதி ஜெயசூர்யாவும் நேற்று புட்டனிஸை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புகளைத் தொடர்ந்தே, அமெரிக்காவே தனது விசாரணை யோசனையை கைவிட்டதாக கூறப்படுகிறது.
இந்திய உதவி நாடும் ராஜபக்சே-நெடுமாறன்:
முன்னதாக இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் நேற்று ஒரு வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கையில் போரின் போது தமிழர்களுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் இழைத்த குற்றங்கள் குறித்தும், அதில் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கை பாதுகாப்புத் துறை செயலருமான கோத்தபய ராஜபக்சேவின் பங்கு குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விசாரணையை தடுத்து நிறுத்தவும், தனது சகோதரரைக் காப்பாற்றவும் இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியாவின் உதவியை நாடியுள்ளார்.
இதற்காக டெல்லிக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் பிரதமரையும், உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இலங்கையில் ஒரு லட்சம் தமிழர்களை கொன்று குவித்த போர்க் குற்றவாளிகளைக் காப்பாற்ற இந்திய அரசு உதவுவது தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல, மனித நேயமற்ற செயலும் ஆகும்.
ஏற்கெனவே, ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசு மீது கொண்டுவரப்பட்ட கண்டனத் தீர்மானத்தைத் தோற்கடிக்க இந்தியா வரிந்துகட்டிக் கொண்டு செயல்பட்டது.
இப்போதும் அதேபோல செயல்படுமானால், ஒட்டுமொத்த தமிழர்களின் எதிர்ப்புக்கும் மத்திய அரசு ஆளாக நேரிடும் என்று கூறியிருந்தார் நெடுமாறன்.