நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நாளை துவக்கம்
3 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் பெரும் வெற்றி பெற்று எதி்ர்க் கட்சிகளான பாஜகவும், இடதுசாரிகளும் மண்ணைக் கவ்வியுள்ள சூழலில் இந்தக் கூட்டத் தொடர் ஆரம்பிக்கிறது.
இந்தியாவை தாக்க அமெரிக்க தீவிரவாதியின் சதித் திட்டம் குறித்த புதுப்புதுத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த விவகாரத்தை எதிர்க் கட்சிகள் நாடாளுமன்றத்தில் கிளப்பவுள்ளன.
மேலும் பல மாநிலங்களிலும் நக்ஸல்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்தத் தவறிய மத்திய அரசு மீது எதிர்க் கட்சிகள் தாக்குதல் தொடுக்கலாம்.
அதேபோல ஈழத் தமிழர் பிரச்சனை, முல்லைப் பெரியாறு அணை விவகாரம் ஆகியவற்றை தமிழக, கேரள எம்பிக்கள் கிளப்பலாம்.
இந்தக் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து சபாநாயகர் மீராகுமார் அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்டி ஆய்வு செய்தார். அப்போது அவர் கூட்டத் தொடரை அமைதியாக நடத்த ஒத்துழைக்கும்படி அனைவரிடமும் கேட்டுக் கொண்டார்.
அதே போல காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் இந்தக் கூட்டத்தொடர் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அடுத்தமாதம் 22ம் தேதி வரை நடக்கவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்கள், சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
குற்றவியல் வழக்குகளில் விசாரணைகளை விரைந்து முடிப்பதற்கு வசதியாக நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் வகையில் திருத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுளளது. தடயவியலில் உதவும் வகையில் மரபணு சோதனை தொடர்பாக தனிச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது.
மன்மோகன் சிங் யுஎஸ் பயணம்:
இந் நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் 5 நாள் பயணமாக வரும் 22ம் தேதி அமெரிக்கா செல்கிறார்.
பராக் ஒபாமா அதிபரான பின் சிங் மேற்கொள்ளும் முதல் அதிகாரப்பூர்வமாக அமெரிக்க பயணம் இது தான்.
ஒபாமா பதவி ஏற்ற பிறகு, அதிகாரப்பூர்வமாக அமெரிக்கா செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவரும் மன்மோகன் சிங் தான்ர்.
24ம் தேதி ஒபாமா-மன்மோகன் சிங் சந்திப்பு நடக்கவுள்ளது. தீவிரவாதம், பாதுகாப்பு, அணுசக்தி துறையில் ஒத்துழைப்பு, ராணுவ ஒத்துழைப்பு, பருவநிலை மாற்றம், உணவு பாதுகாப்பு ஆகிய பிரச்சனைகள் குறித்து இருவரும் விவாதிக்கவுள்ளனர்.
உளவுத் தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள்வது குறித்தும் விவாதிக்கவுள்ளனர்.
இரு தரப்பும் சில முக்கி. ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடவுள்ளனர். ஆனால், அது குறித்த விவரங்களை இரு நாடுகளும் இன்னும் வெளியிடவில்லை.
இந்தியாவில் நாசவேலை நடத்த டேவிட் கோல்மன் ஹெட்லி, உசைன் ரானா ஆகியோர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தீவிரவாத ஒழிப்பில் ஒத்துழைப்பது குறித்து ஒபாமா-மன்மோகன் சிங் பேச்சு நடத்துவது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.
அதே போல திபெத் சீனாவின் ஒரு பகுதி தான் என்று நேற்று பெய்ஜி்ங்கில் ஒபாமா கூறிய கருத்து இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு நடக்கிறது.