காம்தே மனைவி நூலால் சலசலப்பு- மும்பை போலீஸ் அதிகாரி கொந்தளிப்பு
இந்த நூலுக்கு மகாராஷ்டிர உள்துறை அமைச்சகம் விளக்கம் அளிக்க வேண்டும். அல்லது தான் பதவி விலகப் போவதாக அவர் எச்சரித்துள்ளார்.
டு தி லாஸ்ட் புல்லட் என்ற பெயரில் வினிதா காம்தே நூல் எழுதியுள்ளார். இந்த நூல் செவ்வாய்க்கிழமையன்று சமூக சேவகர் அருணா ராய் மற்றும் முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜூலியோ ரிபெய்ரா ஆகியோரால் வெளியிடப்பட்டது.
மும்பை தாக்குதல் சம்பவத்தின் நிகழ்வுகள் குறித்த புத்தகம் இது. இந்த நூலில், மும்பை குற்றப் பிரிவு இணை ஆணையர் ராகேஷ் மரியா, 59 மணி நேரம் நீடித்த தீவிரவாதிகளின் முற்றுகையின்போது காவல்துறை கட்டுப்பாட்டு அறையை தனது பொறுப்பில் வைத்திருந்தார்.
ஆனால் கூடுதல் ஆணையராக இருந்த எனது கணவர் காம்தே எப்படி காமா மருத்துவமனைக்குச் சென்றார் என்பது குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார். உண்மையில் மரியாதான், எனது கணவரை காமா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இடையில் நடந்ததன் உண்மை நிலவரம் என்ன என்பது தெரிய வேண்டும் என்று கூறியுள்ளார் வினிதா.
இந்த குற்றச்சாட்டால் கொதிப்படைந்துள்ளார் மரியா. இதுகுறித்து மகாராஷ்டிர மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர். பாட்டீலுக்கு அவர் ஒரு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், வினிதா காம்தேவின் குற்றச்சாட்டுக்கு உள்துறை விளக்கம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்னை பதவி விலக அனுமதிக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார்.
இருப்பினும் தனது குற்றச்சாட்டு அப்படியேதான் உள்ளது, அதில் எந்த மாற்றமும் இல்லை என்று வினிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து வினிதா கூறுகையில், எனது நூலில் நான் எழுதியுள்ளது குறித்து யார் எந்த விளக்கம், கேள்விகள் கேட்டாலும் அதற்குப் பதிலளிக்க நான் தயார். நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் நான் மீண்டும் உறுதி செய்கிறேன்.
மும்பை போலீஸாரிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல்களின் அடிப்படையில்தான் நான் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளேன்.
முதலில் இந்தப் புத்தகத்தை எழுத நான் விரும்பாமல்தான் இருந்தேன். ஆனால் நவம்பர் 26ம் தேதி இரவு நடந்த உண்மைச் சம்பவத்தை வெளிக் கொணர வேண்டும், எனது கணவரின் மரணத்திற்கு என்ன காரணம் என்பதை அறிய வேண்டும் என்ற உள்ளுணர்வால்தான் இந்த நூலை எழுதினேன் என்றார் வினிதா.