இது பங்கரப்பா மகன்-பாஜக எம்எல்ஏக்கள் சதி: ஹாலப்பா
இந்த கற்பழிப்பு விவகாரம் வெளியில் வந்ததால் தனது பதவியை ராஜினாமா செய்த ஹாலப்பா நிருபர்களிடம் கூறுகையில்,
எனக்கு எதிராக சிலர், குறிப்பாக எனது கட்சியினரே அவதூறு பரப்பி உள்ளனர். இது எனது எதிரிகளின் சதி வேலை. நான் எந்த தவறும் செய்யவில்லை. இந்த குற்றச்சாட்டில் உண்மையில்லை. இது ஆதாரமற்ற புகார். இதுதொடர்பாக எந்த விசாரணைக்கும் நான் தயார்.
தற்போது கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற இருக்கிறது. இந் நிலையில் நான் பதவியை ராஜினாமா செய்யாவிட்டால் பாஜகவுக்கும் கட்சி தலைவர்களுக்கும், முக்கியமாக முதல்வர் எதியூரப்பாவுக்கும் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படும்.
அதோடு தேர்தலில் பாஜகவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தான் அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்தேன். மற்றபடி குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்கிறது என்பதால் ராஜினாமா செய்யவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை.
இந்த செக்ஸ் குற்றச்சாட்டு சதியில் முன்னாள் முதல்வர் பங்காரப்பா குடும்பத்தினருக்கு, குறிப்பாக அவரது மகன் மது பங்காரப்பாவுக்கு பங்குள்ளது. மது பங்காரப்பா தீட்டிய சதி திட்டம் தான் இது.
மேலும் ஷிமோகா மாவட்டத்தை சேர்ந்த சில பாஜக எம்எல்ஏக்களும் இந்த சதியில் ஈடுபட்டுள்ளனர். அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற ஆசையில் எங்களது கட்சி எம்எல்ஏக்களே இந்த சதி வலையை பின்னியுள்ளனர்.
எனவே, இதில் சம்மந்தப்பட்ட பாஜக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கட்சி மேலிடத்தில் புகார் செய்வேன்.
முதல்வர் எதியூரப்பா மற்றும் பாஜகவின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்த சதி செய்துள்ளனர். இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். என் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சிறை செல்லவும் தயார் என்றார்.
இந் நிலையில் ஹாலப்பாவை மாட்டிவிட்டதில் பாஜக எம்எல்ஏ பேளூர் கோபாலகிருஷ்ணாவுக்கு முக்குய பங்குள்ளதாகக் கூறப்படுகிறது.
ஹாலப்பா ரொம்ப நல்லவர்-எதியூரப்பா:
இந் நிலையில் ஹாலப்பா ராஜினாமா முதல்வர் எதியூரப்பா கூறுகையில்,
வரும் 8ம் தேதியும், 12ம் தேதியும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ளன. இந்த நேரத்தில் தன் மீதான பிரச்சனையை எதிர்க்கட்சிகள் தங்களுக்கு ஆதாயமாக பயன்படுத்திக்கொள்ள இடம் கொடுக்கக்கூடாது என்ற எண்ணத்தில், தனது ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளும்படி ஹாலப்பா என்னிடம் வலியுறுத்தினார். அதன்படி அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
ஆனால், ஹாலப்பா மிகவும் நேர்மையானவர். கட்சிக்கு மிகவும் விசுவாசமானவர். இதுவரை அவரது வாழ்க்கையில் அவர் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளானதில்லை.
முதல்கட்ட விசாரணையில், அவர் மீதான குற்றச்சாட்டில் எந்த உண்மையும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால், கட்சிக்கு தன்னால் எந்த நெருக்கடியும் ஏற்பட வேண்டாம் என்று கருதுவதாகவும், தான் நிரபராதி என்று நிரூபிக்க விரும்புவதாகவும், ஆகவே தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளும்படியும் அவர்தான் என்னை வலியுறுத்தினார். ஆகவே அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்டேன்.
பத்திரிகையில் வெளியான இந்த செய்தி எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட அரசியல் சதி. தென் இந்தியாவில் பாஜக கட்சியின் ஆட்சி நடக்கும் ஒரே மாநிலமான கர்நாடகவில் பல வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் சமீபத்தில் நடந்த பெங்களூர் மாநகராட்சி தேர்தலிலும் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
இவற்றையெல்லாம் ஜீரணித்துக் கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் இத்தகைய குற்றச்சாட்டுகளை வேண்டுமென்றே பரப்பி விட்டுள்ளன என்றார் எதியூரப்பா.
கிரிமினல் வழக்கு-காங்கிரஸ் கோரிக்கை:
இந் நிலையில் ஹாலப்பா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து அவரைக் கைது செய்ய வேண்டும் என்று கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே கோரியுள்ளார்.
அதே போல சட்டசபை காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறுகையி்ல், ஹாலப்பாவின் ராஜினாமா மட்டும் போதாது. அவர் மீது போலீசார் கிரிமினல் வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்து சிறைக்கு அனுப்ப வேண்டும். மேலும், தனது அமைச்சரவையில் உள்ள சக அமைச்சர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், முதல்வர் எதியூரப்பாவும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். அதைவிட்டுவிட்டு ஹாலப்பாவை ஆதரித்து எதியூரப்பா பேசிக் கொண்டிருப்பது அரசியல் அசிங்கம் என்றார்.
பங்காரப்பாவின் மைத்துனர்
பங்கராப்பாவின் உறவினர்தான் இந்த ஹாலப்பா என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மைத்துனராம். நண்பரின் மனைவியை கற்பழித்து அக்கிரமமாக நடந்து கொண்டு பதவியை ராஜினாமா செய்துள்ள ஹாலப்பா குறித்து பங்காரப்பா கூறுகையில்,
எனது மைத்துனர் நடவடிக்கை துவக்கத்திலிருந்தே தவறாக தான் இருந்தது. பெண்கள் விஷயத்தில் அவர் மிகவும் பலகீனமானவர். என் கட்சியில் இருந்த போது, அவர் மீது ஏராளமான புகார்கள் வந்தன. குறிப்பாக பெண்களுடன் அதிக தொடர்பு வைத்திருந்தவர் என்று கூறப்பட்டது.
ஆனால் ஹாலப்பா இந்த அளவிற்கு அவர் கீழ்த்தரமாக செயல்படுவார் என்று நினைக்க வில்லை. ஆனால் அரசியல் காரணமாக அவர் என் மீது வீண் புகார் சுமத்தியுள்ளார் என்று சாடியுள்ளார் பங்கராப்பா.