முன்னாள் எல்டிடிஇ போராளிகள் திருமணத்தில் விவேக் ஓபராய்!
கொழும்பு: விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகளுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் அவர்களின் கவனத்தை திசை திருப்பும் முயற்சியில் இறங்கியுள்ளது சிங்களப் படை.
விடுதலைப் புலிகள் அமைப்பில் ஏற்கெனவே சாதி மத வித்தியாசமில்லாமல் திருமணங்களை அனுமதித்தவர் அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரன்.
புலிகள் ஆயுதங்களை மவுனிக்கச் செய்த பிறகு, ஏராளமான புலிகள் படையினரிடம் சரணடைந்தனர். இவர்களில் மணமாகாதோருக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது இலங்கை ராணுவம்.
முதல் கட்டமாக தமிழீழ விடுதலைப் புலிப் போராளிகளாக இருந்த 53 ஜோடிகளுக்கு ஒரே நாளில், ஒரே மேடையில் இன்று காலை திருமணம் செய்து வைக்கப்பட்டது.
இலங்கை புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் பிரிகேடியர் சுதந்த ரணசிங்க இத்திருமண விழாவை முன்னின்று நடத்தினார்.
வவுனியாவின் பம்பைமடு புனர்வாழ்வு நிலையத்தில் இத்திருமண விழா வெகு விமரிசையாக இடம்பெற்றது.
இதில் இலங்கை அதிபர் ராஜபக்சேயின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சே, இந்தி திரைப்பட நடிகர் விவேக் ஒபராய், அமைச்சர் ரிஷாத் பதியுதீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஐஃபா விழாவுக்குப் போன விவேக் ஓபராய் மற்றும் சல்மான்கான் போன்ற இந்தி நடிகர்கள் இன்னும் நாடு திரும்பாமல், இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.