கருணாநிதி தமிழுக்கு செய்ததை விட செய்யாததே அதிகம்-கனடா படைப்பாளிகள் கழகம்
டொரன்டோ: தமிழக முதல்வர் கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்ததைவிட, செய்யாது விட்டதே அதிகம் என்று கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து தமிழ் படைப்பாளிகள் கழகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர்நீதிமன்றத்தில், தமிழ் நீதிமன்ற மொழியாக உடனடியாக ஆக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சென்னை உட்பட தமிழ்நாட்டின் மாவட்டத் தலைநகர்களில் கடந்த 11 நாள்களாக வழக்கறிஞர்கள் நடத்தி வரும் சாகும்வரையிலான உண்ணா நோன்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இந்த சாகும்வரை உண்ண நோன்புப் போரட்டத்தை ஆதரித்து நாம் தமிழர் இயக்க நிறுவனர் சீமான், அதிமுக தலைவி ஜெயலலிதா, மதிமுக செயலர் கைகோ, மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் போன்றோர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் தமிழர்களது அடிப்படை உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பெரிய போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது. போராடாமல் எதனையும் பெறமுடியாத அவல நிலை தமிழ்நாட்டில் நிலவுகிறது.
அரசு அலுவலங்களில் தமிழ்மொழிப் பயன்பாடா? திருக்கோயில்களில் தமிழில் வழிபாடா? அனைத்துச் சாதியினரையும் அர்ச்சகர் ஆக நியமனம் செய்ய வேண்டுமா? தமிழைக் கற்கும் மொழி ஆக்குவதா? அங்காடிகளின் பெயர்ப் பலகைகளைத் தூய தமிழில் எழுதி வைக்க வேண்டுமா ? இப்படி எதுவானாலும் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.
தமிழை ஒரு பாடமாக எடுக்காமல் பல்கலைக்கழகம் வரை படித்து ஒரு மாணவன் பட்டம் பெற்றுவிட முடியும் என்ற அவல நிலை தமிழ்நாட்டில் இருக்கிறது.
இதில் வேதனை என்னவென்றால் 1957ம் ஆண்டு முதல் பதின்மூன்று முறை சட்டமன்றத் தேர்தலில் வென்று ஐந்து முறை (பதினெட்டு ஆண்டுகள்) முதலமைச்சர் நாற்காலியை அலங்கரிக்கும் முதல்வர் கருணாநிதி ஆட்சியில்தான் இந்த அவலம் நீடிக்கிறது.
இப்போது கோவையில் செம்மொழி மாநாடு நடப்பதால் சென்னையிலும் கோவையிலும் அங்காடிகளின் பெயர்களைத் தமிழில் எழுதி வைக்கும் முயற்சி நடக்கிறது. பல அங்காடி உரிமையாளர்கள் ஆங்கிலப் பெயர்களை அப்படியே தமிழில் எழுதி வைத்துள்ளார்கள். செம்மொழி மாநாடு முடிந்தவுடன் பழைய குருடி கதவைத் திறடி என்ற பழமொழிக்கு ஒப்ப மீண்டும் ஆங்கிலப் பெயர்ப் பலகைகள் காட்சியளிக்கத் தொடங்கிவிடும் என்பதில் ஐயமில்லை.
வட மாநிலங்களான உத்திரப்பிதேசம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், பீகார் ஆகிய மாநிலங்களில் நீதிமன்றங்களில் இந்திமொழியில் வழக்காட அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் செம்மொழி தமிழில் வழக்காட உரிமை இல்லை. தமிழ்நாடு அரசு தமிழில் வழக்காட அனுமதி கேட்டுக் குடியரசுத் தலைவருக்கு எழுதிய மடலுக்கு நான்கு ஆண்டுகள் கழித்தும் மறுமொழி கிடைக்காத அவல நிலை தொடர்கிறது. இந்த அழகில் அதே குடியரசுத தலைவர் செம்மொழி மாநாட்டைத் தொடக்கி வைக்க அழைக்கப்பட்டு இருக்கிறார்.
முதல்வர் கருணாநிதி தமிழ்மொழி வளர்ச்சிக்குச் செய்ததைவிட செய்யாது விட்டதே அதிகம் எனக் குற்றம் சாட்டுகிறோம்.
தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் தமிழக வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள உண்ணா நோன்புப் போராட்டத்துக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.