விரைவில் வக்கீல்களுக்கு மகிழ்ச்சிகரமான தகவலை கருணாநிதி அறிவிப்பார்: துரைமுருகன்

ராணிபேட்டையில் நடந்த ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,
கடந்த ஆட்சியில் வெறும் ரூ.23 கோடியே 67 லட்சம் மதிப்பில் தான் நீதிமன்றங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் கலைஞர் ஆட்சியில் ரூ.387 கோடி மதிப்பிலான நீதிமன்றங்கள் கட்டும் பணி நடந்து கொண்டிருக்கின்றன.
நீதித்துறையால் நீதியை மட்டும் தான் வழங்க முடியும். அவற்றால் எந்த வருவாயும் ஈட்ட முடியாது. இருந்தாலும் நீதித்துறையினர் கேட்டவற்றை எல்லாம் செய்து கொடுத்துள்ளோம்.
ஆந்திர மாநிலத்தில் எல்லாம் வக்கீல்கள் ஸ்டிரைக் கிடையாது. இங்கு வக்கீல்கள் மட்டுமின்றி சட்டகல்லூரி மாணவர்களும் ஸ்ட்ரைக் நடத்துகிறார்கள். விரைவில் தமிழ்மொழி வழக்காடு மொழியாகப் போகிறது. ஏராளமான வழக்குகள் தேங்கி இருப்பதால், அவற்றை முடிக்க விடுமுறை நாட்களிலும் நீதிமன்றங்கள் செயல்பட தலைமை நீதிபதி நடவடிக்கை எடுத்து வருகிறார்.
வக்கீல்கள் இறந்தால் அரசு வழங்கும் நிதி உதவி தொகையை ரூ.5 லட்சத்தில் இருந்து உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பான பேச்சுவார்த்தை 95 சதவீதம் முடிந்து விட்டது. இது தொடர்பாக விரைவில் வக்கீல்கள் மகிழும் வண்ணம் அறிவிப்பு வரும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications