சொத்து வழக்கு-ஜெ மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தாக்கல் செய்த அப்பீல் மனு மீதான விசாரணை வரும் 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானத்தை மீறி சொத்து குவித்தது தொடர்பான வழக்கு பெங்களூர் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலத்தின் நகலை தங்களுக்கு வழங்குமாறு ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவின் அடிப்படையில் சாட்சிகள் வாக்குமூலத்தின் நகல் ஜெயலலிதாவின் வழக்கறிஞரிடம் வழங்கப்பட்டது. ஆனால், அதில் தவறுகள் இருப்பதாகவும், இதனால் அதை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஜெயலலிதா சார்பில் தனி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி மல்லிகார்ஜுனய்யா, ஜெயலலிதாவின மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் அந்த ஆவணத்தில் உள்ள தவறுகளை மட்டும் சரிசெய்ய மொழி பெயர்ப்பு நிபுணர்களை நியமிக்கவும் உத்தரவிட்டார்.
இந் நிலையில் தனி நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவின் தாயார் இறந்து விட்டதால் அவர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதையடுத்து ஜெயலலிதா மனு மீதான விசாரணையை வரும் 16ம் தேதிக்கு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
மேலும் அதுவரை தனி நீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்கில் சாட்சிகளின் மறு விசாரணையையும் நிறுத்தி வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
வாய்தா-ஜெ.வுக்கு எதிரான போஸ்டர்: போலீசில் புகார்
இந் நிலையில் சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து தப்பிக்க அடிக்கடி வாய்தா வாங்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து, வரும் ஆகஸ்ட் 4ம் தேதி திமுக இளைஞர் அணி சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்த அறிவிப்புக்கு பின்னர் மதுரை மாவட்ட திமுகவினர், கண்டன ஆர்ப்பாட்டம் குறித்து நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.
இந்நிலையில் இந்த போஸ்டர்கள் ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதத்தில் உள்ளது என்று கூறி அதிமுக மாநில மாணவர் அணிச் செயலாளர் ஆர்.டி.உதயகுமார், அதிமுக மதுரை மாவட்டச் செயலாளர் செல்லூர் ராஜ் ஆகியோர் இன்று மதுரை போலீஸ் கமிஷனர் பாலசுப்பிரமணியனிடம் புகார் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவை அவமானப்படுத்தும் விதமாக வாசகங்கள் இடம் பெற்றிருக்கின்றன. இதனால் போஸ்டர்களை ஒட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.