விரைவில் தொடங்கும் என்ஜினீயரிங் துணை கவுன்சிலிங்: 14, 16 தேதிகளில் விண்ணப்பிக்கலாம்
சென்னை: பொறியியல் படிப்புக்கான துணை கவுன்சிலிங் விரைவில் தொடங்கவுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான கவுன்சிலிங் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்து வருகிறது. அகடமிக் பொது கவுன்சிலிங் கடந்த ஜுலை மாதம் 5-ம் தேதி தொடங்கி இன்னும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
துணைவேந்தர் பேராரிசிரியர் பி. மன்னர் ஜவகர் நேற்று நடந்த கவுன்சிலிங்கை நேரில் பார்வையிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த 35 நாட்களாக கவுன்சிலிங் நடைபெற்றுள்ளது. இதற்கு 1 லட்சத்து 47 ஆயிரம் மாணவ-மாணவிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. ஆனால், அவர்களில் 45 ஆயிரம் பேர் வரவில்லை. 1 லட்சத்து 2 ஆயிரம் பேர் தாங்கள் விரும்பிய கல்லூரிகளில் இடங்களை தேர்ந்தெடுத்துள்ளனர்.
8-ம் தேதியுடன் கவுன்சிலிங் முடிந்தாலும் தொடர்ந்து 12, 13 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு கட் ஆப் மார்க் 92க்கும் குறைவாக எடுத்துள்ளவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக 78 கட் ஆப் மார்க் வரை அழைக்கப்பட்டுள்ளனர். தற்போது காலியாக உள்ள 10,000 இடங்களுக்கு 13,000 மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
துணை கவுன்சிலிங் விரைவில் தொடங்க உள்ளது. அதற்கான விண்ணப்பங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் 14 மற்றும் 16-ம் தேதிகளில் விநியோகம் செய்யப்படும். விண்ணப்பங்களை வாங்கி அங்கேயே நிரப்பிக் கொடுக்க வேண்டும். விண்ணப்ப படிவத்தின் விலை ரூ. 500. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும்.
விண்ணப்பிக்க வரும் போது பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ், பிளஸ்-2 ஹால் டிக்கெட், 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் (தேவைப்படுபவர்களுக்கு), பூர்வீகச் சான்றிதழ்(தேவைப்படுபவர்களுக்கு), முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கான சான்றிதழ் (தேவைப்படுபவர்களுக்கு) ஆகியவற்றின் ஜெராக்ஸ் காப்பியை கொண்டு வர வேண்டும். இத்துடன் புகைப்படம் ஒன்றும் கொண்டு வர வேண்டும்.
வரும் 13-ம் தேதி கவுன்சிலிங் முடிந்த பிறகு காலியாக உள்ள இடங்கள் தான் துணை கவுன்சிலிங்கில் இடம் பெறும். ஏற்கனவே விண்ணப்பிக்காதவர்கள் விண்ணப்பிக்கலாம். பிளஸ்-2 தேர்வில் பெயிலாகி மறு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே கல்லூரிகளில் இடங்களை தேர்ந்தெடுத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். ஆனால், ஏற்கனவே அவர்கள் தேர்ந்தெடுத்துள்ள இடத்தை வேறு யாரும் பயன்படுத்த முடியாது.
இந்த துணை கவுன்சிலிங்கின் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறினார். அப்போது மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரராஜ் அருகில் இருந்தார்.












Click it and Unblock the Notifications