கொல்கத்தாவில் மமதா-டெல்லியிலிருந்து ஃபைல்களை அனுப்ப ரூ. 11 லட்சம் செலவு
கிட்டத்தட்ட கடந்த ஒரு வருடமாகவே டெல்லியில் இல்லை மமதா. எப்போதாவதுதான் டெல்லிக்கு வருகிறார். மேற்கு வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வேகத்தில் இருக்கும் அவர், கொல்கத்தாவிலேயே முகாமிட்டு மக்களை சந்தித்து வாக்கு வங்கிகளை பலப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
மத்திய ரயில்வே அமைச்சராக இருக்கும் மமதா இவ்வாறு நடந்து வருவது எதிர்க்கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் இதுகுறித்து மமதா கவலைப்படவில்லை. தொடர்ந்து கொல்கத்தாவிலேயே டேரா போட்டு வருகிறார்.
மமதா கொல்கத்தாவில் முகாமிட்டிருப்பதால் டெல்லியில் உள்ள ரயில்வே அமைச்சகத்திலிருந்து கோப்புகளை மமதாவுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். இதற்காக மட்டும் கடந்த ஒரு வருடத்தில் 11 லட்சத்து 23 ஆயிரத்து 550 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாம். அதாவது இந்த கோப்புகளை கொண்டு செல்லும் அதிகாரிகளுக்கான விமான பயணச் செலவாகும் இது.
மமதாவிடம் ஃபைல்களைக் கொடுப்பதற்கான பணியில், மமதாவின் சிறப்பு பணி அதிகாரி கெளதம் சன்யால், தனிச் செயலாளர் சாந்தனு பாசு, செயல் இயக்குநர் ஜே.கே.சஹா, கூடுதல் முதன்மைச் செயலாளர் அசோக், உதவி முதன்மைச் செயலாளர் ரத்தன் முகர்ஜி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.
இவர்களில் சஹா மற்றும் முகர்ஜியைத் தவிர மற்ற 3 பேரும், 2009ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி முதல் 2010ம் ஆண்டு ஜூன் 13ம் தேதி வரை விமான பயணத்துக்காக ரயில்வே அமைச்சகம் செலவிட்ட தொகை ரூ. 8,73.946 ஆகும்.
சஹா, முகர்ஜியின் விமான பயணத்துக்கு எவ்வளவு செலவானது என்பதை ரயில்வே தெரிவிக்கவில்லை. இந்த தகவல் எல்லாம் ஆர்டிஐ விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.