ரஜினி வாரிசுகள் சினிமாவுக்கு வரலாம், எனது மகன்கள், பேரன்கள் வரக் கூடாதா' கருணாநிதி கேள்வி
சென்னையில் இன்று நடந்த தமிழ்த் திரையுலகினரின் கலைஞர் நகரம் அடிக்கல் நாட்டு விழாவில் முதல்வர் கருணாநிதி பேசினார்.
விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:
நான் இன்று நேற்றல்ல ஏறத்தாழ 60 ஆண்டுகள் கலைத்துறையோடு ஈடுபாடு கொண்டவன். கருணாநிதிக்கு கலைத்துறையால் பெயரா, அரசியலால் பெயரா என்று பட்டிமன்றம் கூட நடத்துவதுண்டு. அந்த அளவுக்கு என் வாழ்வில் கலைத் துறையும் அரசியல் துறையும் ஒன்றோடு ஒன்று இணைந்தது.
கலைத்துறையை எந்த அளவுக்கு அரசியல் துறைக்கு பயன்படுத்தி அரசியலில் வெற்றிகளை பெற வேண்டுமோ அந்த அளவுக்கு அரசியலில் நானும் நான் சார்ந்த இயக்கமும் பயன்படுத்தி வந்திருக்கிறோம்.
இத்துறையில் வியர்வை வடிக்கின்ற தொழிலாளர்களுக்கு பாடுபடுகின்ற பாட்டாளிகளுக்கு அவர்கள் வாழ்வதற்கு தேவையான குடியிருப்பைக் கூட வழங்காவிட்டால் எப்படித்தான் அவர்களை வாழவைக்க முடியும் என்று நான் பல ஆண்டுகள் கவலைப்பட்டதுண்டு.
அவர்கள் படக்காட்சிகளுக்காக பெரிய ஆடம்பர மாளிகைகளை அமைக்கிறார்கள். ஆனால்அப்படிப்பட்ட அழகு மாளிகைகளில் வாழுகின்ற வாய்ப்பு ஏழை திரைப்பட தொழிலாளர்களுக்கு கிடைப்பதில்லை. அவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என்று இந்த அரசிடம் கேட்டார்கள். அதை நிறைவேற்றி தருவதற்குத்தான் இந்த திட்டம்.
இந்த அரசு அவர்களுக்கு நிறைவேற்றி தந்த கோரிக்கைகள் ஒன்று இரண்டல்ல, அவர்கள் வைத்த அனைத்து கோரிக்கைகளையும் முடிந்த வரை திமுக அரசு நிறைவேற்றி தந்துள்ளது.
அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி மண்டபத்தில் படப்பிடிப்பு நடத்த 2003ம் ஆண்டு 1லட்சமாக இருந்த வாடகையை திமுக அரசு பதவி ஏற்றதும் 10 ஆயிரமாக மாற்றி உத்தரவிடப்பட்டது. இப்படி படப் பிடிப்பு நடத்தும் இடங்களுக்கு 10 ஆயிரம் இருந்த வாடகையை 5 ஆயிரமாகவும், 5 ஆயிரம் என இருந்த வாடகையை 3 ஆயிரமாகவும் குறைத்து உத்தரவிட்டோம்.
அதற்கு பிறகும் கேளிக்கை வரியில் உதவ வேண்டும் என கேட்டார்கள். அதனை ஏற்று தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு கேளிக்கை வரியே கிடையாது என்று உத்தரவிடப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் கேளிக்கை வரியே இல்லாத நிலை உருவாகியுள்ளது. இன்றைக்கு முழுக்க முழுக்க கலைவிழாவாக நடைபெறும் இந்த விழாவை பற்றி கேலிச்சித்திரம் வெளியிட்டிருக்கிறார்கள்.
வாரிசுகள் கலைத்துறையிலும், அரசியல் துறையிலும் வருவது சகஜம்தான். ஆனால் என்னை மட்டும் குறி வைத்து ஏன் தாக்குகிறார்கள் என்பதை பொது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
என் மகன், பேரன்கள் என்று வரிசையாக கலைத்துறையில் வருவதை ஏன் கேலி செய்கிறார்கள். எனக்கு வாரிசுகள் இருக்கக்கூடாதா? என் மனைவி மலடியாக இருந்திருக்க வேண்டுமா என்ன?
ரஜினிக்கு வாரிசுகளாக மகள்கள் இல்லையா? சினிமாவில் அவர் மட்டுதான் நடிக்கிறாரா. மருமகன் தனுஷும்தானே நடிக்கிறார்.
ராஜ்கபூர்,ரிஷிகபூர் என்று பல கபூர் இருக்கின்றனவே. இந்த கபூர் எல்லாம் யார்; வாரிசுகள்தானே. என் நண்பர் சிவாஜிக்கு பிரபு என்று அவரது மகன் வாரிசாக இல்லையா. சிவாஜியின் பேரன் துஷ்யந் நடிக்கைவில்லையா.
கலைத்துறையில் வாரிசுகள் இருக்கும்போது ஏன் என்னை மட்டும் தாக்குகிறார்கள். நான் திராவிட இனத்துக்கு பாடுபடுவதால் அதனை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே என்னை குறி வைத்து என் வாரிசுகள் பற்றி பேசுகின்ற குறுகிய நோக்கம் அவர்களுக்கு இருக்கிறது. ரஜினி அரசியலில் இல்லாததால் அவரைப்பற்றி யாரும் பேசுவதில்லை.
கலையுலகத்துக்கும் பொது மக்களுக்கும் நான் பாடுபடுவதை அவர்களுக்காக நான் பணியாற்றுவதை யாராலும் தடுக்க முடியாது. திரைத் துறையினருக்கான என் பணி என்றும் தொடரும் என்றார்.