பல ஆண்களுடன் தொடர்பு: மயக்க ஊசி-விஷம் ஊற்றி மகளை கொலை செய்த தந்தை!
மதுரை எஸ்.எஸ்.காலனியைச் சேர்ந்த ரெங்கசாமி (48) பை-பாஸ் ரோட்டில் டிராக்டர் ஒர்க்-ஷாப் வைத்துள்ளார். இவரது மனைவி லட்சுமி, மகள் மாரிச்செல்வி (18).
இரு நாட்களுக்கு முன் லட்சுமி வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பியபோது மாரிச்செல்வி வாயில் நுரைதள்ளியபடி மயங்கிக் கிடந்தார். அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாரிசெல்வியின் சாவில் மர்மம் இருப்பதாக லட்சுமி எஸ்.எஸ்.காலனி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நடத்தப்பட்ட பிரேதப் பரிசோதனையில் மாரிசெல்வி விஷ ஊசி போடப்பட்டும் விஷம் தரப்பட்டும் கொலையானது உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த விவரம்:
மாரிச்செல்விக்கும் அவரது தாய் லட்சுமியின் தம்பி மோகனுக்கும் கடந்த 3 மாதங்களுக்கு முன் வீட்டில் வைத்து எளிமையாக திருமணம் நடந்தது. அப்போது மாரிச்செல்விக்கு வயது 17 தான் ஆகியிருந்தது. இதனால் 18 வயது பூர்த்தியான பின் பெரிய அளவில் திருமண விழாவை நடத்த முடிவு செய்திருந்தனர்.
ஆனால், மாரிச்செல்வியி்ன் தந்தை ரெங்கசாமி, தன் தங்கை மகன் சண்முகராஜனை, மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டிருந்தார். எனவே, மாரிச்செல்வி, மோகனை திருமணம் செய்து கொண்டதில் ரெங்கசாமி கோபமானார்.
இந் நிலையில் மோகன் வெளிநாட்டில் வேலைகிடைத்துச் சென்று விட்டார். இதையடுத்து மாரிச்செல்விக்கு அப் பகுதியில் சில ஆண்களுடன் தொடர்பு ஏற்பட்டதாகவும் இதை ரெங்கசாமி பலமுறை கண்டித்தும் மாரிச்செல்வி கேட்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே 18 வயது பூர்த்தியாகிவிட்டதால், மாரிச்செல்வி-மோகன் திருமண விழாவை நாளை (27ம் தேதி) நடத்துவது என்று முடிவானது. இதற்காக மோகன் சில வாரங்களுக்கு முன் நாடு திரும்பினார்.
ஆனால், இந்தத் திருமணத்தில் உடன்பாடு இல்லாததாலும், மகளின் நடத்தை சரி இல்லாததாலும் ஆத்திரமடைந்த ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியை கொல்ல திட்டமிட்டார்.
தனது ஒர்க்-ஷாப்பில் வேலை பார்த்து வரும் அலங்காநல்லூரைச் சேர்ந்த மூர்த்தியின் (20) உதவியோடு இந்தக் கொலையை செய்ய திட்டமிட்டார்.
மூர்த்தி மூலமாக அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் பாலுவிடம் தன் மகளைக் கொல்லுமாறு கூறியுள்ளார்.
இதையடுத்து மயக்க ஊசி போட்டு, விஷம் குடிக்க வைத்து கொலை செய்து விடலாம் என்று இவர்கள் முடிவு செய்தனர்.
இரு நாட்களுக்கு முன் தன் மனைவியையும் மகன்களையும் வங்கிக்கு அனுப்பிய ரெங்கசாமி, மகள் மாரிச்செல்வியிடம், ஏ.சி. பொறுத்த 3 பேர் வருவார்கள் என்றும், அவர்கள் வந்தால் பின்வாசல் கதவை திறந்து உள்ளே அனுப்புமாறும் கூறிவிட்டுச் சென்றார்.
இதன்படி மூர்த்தி, பாலு மற்றும் வேல்முருகன் ஆகியோர் வீட்டிற்கு வந்தனர்.
அவர்கள் வீட்டில் ஏ.சி. மாட்ட இடம் பார்ப்பது போல நடித்தவாரே திடீரென்று மாரிச்செல்வியை கீழே தள்ளி, வாயை பொத்தினார். பாலு, தான் கொண்டு வந்த மயக்க ஊசியை மாரிச்செல்வியின் கை-கால்களில் ஏற்றினார்.
இதையடுத்து மாரிச்செல்வியின் வாயில் விஷத்தை ஊற்றிவிட்டு அங்கிருந்து தப்பிவிட்டனர்.
இந்நிலையில் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய லட்சுமி, தனது மகள் உயிருக்கு போராடிய நிலையில் கிடப்பதைப் பார்த்து அலறினார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாரிச்செல்வியை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார்.
ஒரு நிலையில் கொஞ்சம் மயக்கம் தெளிந்த மாரிச்செல்வி, நடந்த சம்பவத்தை தாயார் லட்சுமியிடம் கூறிவிட்டார். இதையடுத்து லட்சுமி போலீசாரிடம் புகார் தந்தார்.
இதைத் தொடர்ந்து மூர்த்தி, பாலு, வேல்முருகன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
தந்தை ரெங்கசாமி தலைமறைவாகிவிட்டார், கோர்ட்டில் சரண் அடைவதற்காக மதுரை காளவாசல் பகுதியில் பதுங்கியிருந்த அவரையும் போலீசார் இன்று கைது செய்தனர்.
ரெங்கசாமி அளித்த வாக்கு மூலத்தில், மாரிச்செல்வி 10ம் வகுப்பு படிக்கும்போதே ஆண் நண்பர்களுடன் பழகத் தொடங்கினாள். அவளை கண்டித்தேன். ஆனாலும் அவளது நடத்தை சரியாக இல்லை.
அடிக்கடி அவளது ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு அவர்களை வீட்டுக்கு அழைத்து வந்தாள். பல ஆண்களுடன் அவளுக்கு தொடர்பு இருந்ததால் எனக்கும், என் குடும்பத் தாருக்கும் அவமானமாக இருந்தது.
மாரிச்செல்வியின் காதலர்கள் என்று கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் என்னிடம் வந்து பெண் கேட்டனர். ஆனால், அவர்களுக்கு பெண் தர மறுத்துவிட்டேன்.
இந் நிலையில் மாரிச்செல்விக்கு திருமணம் செய்து வைத்தால் திருந்தி விடுவாள் என்று எண்ணினேன். உடனே எனது தங்கை மகனுக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தேன். அதற்கு அவள் மறுத்து விட்டாள்.
இதனால் எனது மனைவி லட்சுமியின் சகோதரர் மகன் மோகனுக்கு திருமணம் செய்து கொடுக்க எனது மனைவி முடிவு செய்தாள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.
மோகன் அரவாணி போன்று இருப்பான். எனவே அவனுக்கு ஆண்மை இருக்காது என்று கருதினேன். இப்போதே மகள் பல ஆண்களுடன் பழகுகிறாள். மோகனுக்கு ஆண்மை இல்லாவிட்டால் மகளின் நடத்தை மேலும் மோசமாகி விடும் என்று பயந்து திருமணத்தை தடுக்க முயற்சி செய்தேன். ஆனால் அது நடக்கவில்லை.
27ம் தேதி தென்காசி அருகே சவுந்திரபாண்டியபுரத்தில் திருமணம் செய்ய ஏற்பாடானது. எனவே இதைத் தடுக்க மகளை கொலை செய்ய முடிவு செய்தேன் என்று கூறியுள்ளார்.