சமூக விரோதிகளுக்கு துணைபோகும் காவல்துறை-தா.பா. வேதனை
மதுரை: தமிழ்நாட்டில் காவல்துறையினரின் உதவியோடு சமூக விரோதிகள் குற்ற செயல்களை அரங்கேற்றி வருவதாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ் நாட்டை சமூக விரோதிகளின் வேட்டைக்காடாக மாற்றிடும் அளவுக்கு தமிழகக் காவல்துறையின் நவடிக்கைகள் உள்ளது கண்டிக்கத்தக்கது. தமிழகத்தின் தலைநகரான சென்னையில் அரசுக்கு மாறுபட்ட கருத்தை வெளியிடுவோர் தாக்கப்படுவது தொடர்ந்து கொண்டிருக்கிறது.
மேலும் வாகனங்களை தீயிட்டுக் கொளுத்துவது, கொலைகள், கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை இது வரை கண்டுபிடிக்க முடியாத நிலை பல்வேறு சிந்தனைகளை தூண்டிவிடுகிறது.
பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் வீடுகளை நூதன முறையில் ஆக்கிரமிப்புச் செய்வதும், மிரட்டிப் பணம் வசூலிப்பதும் தற்போதைய ஆட்சியில் சாதாரணமான ஒன்றாகிவிட்டது.
இதில் எல்லாம் காவல்துறையினரின் பங்கு உள்ளது. தமிழகக் காவல்துறையி்ன் முறையற்ற செயல்பாட்டிற்கு இவைகள் ஒரு சில உதாரணங்கள்.
தலைநகர் சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் விருந்தினர்கள், பெண்கள் தாக்கப்படது, நூற்றுக் கணக்கான ஆட்டோக்களில் வந்து மிரட்டியதற்கு தக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் திருமச்சூர் ஊராட்சியில் மூன்று வீடுகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டும் உள்ளார்.
குடவாசல் அருகில் திருவிடச்சேரியில் இஸ்லாமிய மக்களுக்கிடையில் எழுந்த சர்ச்சையில் தனியார் துப்பாக்கியால் சுட்டு இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு காவல்துறை ஆய்வாளர் வீட்டிலிருந்தே 42 சவரன் நகை திருடு போயுள்ளது.
மாநிலமெங்கும் சமூக விரோதிகளின் அட்டகாசம் காவல்துறையினரின் துணையுடன் அல்லது செயலற்ற தன்மையால் அதிகரித்து வருகின்றது.
இதனால் மக்கள் இன்றைய நிர்வாகத்தின் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். காவல்துறையை சட்டப்படி இயங்கச் செய்யுமாறு தமிழக அரசை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வற்புறுத்துகிறது என்று கூறியுள்ளார் தா.பாண்டியன்.