கெளரவக் கொலைகளைத் தொடர்ந்து தற்கொலைகளும் தமிழகத்தில் அதிகரிப்பு
அதேபோல அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் தொகுதியான ஆண்டிப்பட்டி இடம்பெற்றுள்ள தேனி மாவட்டத்தில் இதே காலகட்டத்தில் 82 பெண்கள் தற்கொலை செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் 90 பேரும், தூத்துக்குடியில் 136 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இவற்றில் பெரும்பாலானோர் குடும்பப் பிரச்சினைகள், ஜாதி விட்டு காதலித்ததால் ஏற்பட்ட காதல் பிரச்சினைகள் தொடர்பாக தற்கொலை செய்து கொண்டவர்கள்.மேலும் ஜாதிக்காக தற்கொலை செய்தவர்களும் கணிசமாக உள்ளனராம். அதாவது கெளரவ கொலைகளைப் போல கெளரவ தற்கொலைகளாக இவை வர்ணிக்கப்படுகின்றன.
எவிடென்ஸ் என்ற மதுரையைச்சேர்ந்த என்ஜிஓ அமைப்பு ஆர்டிஐ மூலம் இந்தத் தகவல்களைப் பெற்று வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் கதிர் கூறுகையில், பல தற்கொலைகள் தூண்டி விடப்பட்டவையே. சில சம்பவங்கள் கொலைகளாகக் கூட இருக்கலாம். இருப்பினும் போலீஸார் தற்கொலை என்றுதான் பதிவு செய்துள்ளனர்.
கடந்த 3 மாதங்களில் மட்டும் தமிழகத்தில் 6 கெளரவக் கொலைகள் நடந்துள்ளன. அனைத்து சம்பவங்களிலும் ஜாதிப் பிரச்சினைதான் பெரிதாக இருந்துள்ளது. ஆறில் ஐந்து சம்பவங்களில் பெண்கள் தற்கொலை செய்யத் தூண்டப்பட்டுள்ளனர். அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாவட்டங்கள் அனைத்துமே ஜாதி ரீதியிலான பதட்டத்தைக் கொண்டவையாகும். எனவே இவை கெளரவம் பறி போய் விட்டதே என்பதற்காக தூண்டி விடப்பட்ட தற்கொலைகளாக கருதப்பட வேண்டியுள்ளது என்றார்.
சிபிஎம் மாநில செயலக உறுப்பினர் சம்பத் கூறுகையில், என்னதான் அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டாலும், மக்களிடம் உள்ள தீண்டாமை மற்றும் ஜாதி வெறியை தணிக்க முடியவில்லை. சமத்துவபுரங்கள், ஜாதி விட்டு ஜாதி கல்யாணம் செய்வோருக்கு நிதியுதவி, சமூக நீதிக்கான தேநீர் விருந்துகள் என எதைச் செய்தாலும் அவை அலங்கார செயல்களாகவே உள்ளன.
ஜாதிப் பிரச்சினைகளையும், தீண்டாமைக் கொடுமையையும் ஒழிக்க அரசியல் துணிச்சல் தேவைப்படுகிறது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அது இங்கு இல்லை.
இதுதொடர்பாக உரியசட்டம் கொண்டு வர அரசிடம்துணிச்சல் இல்லை அல்லது ஆர்வம் இல்லை. சமூக அடித்தளத்தில் மாற்றங்களைக் கொண்டு வந்தால்தான் இந்தப் பிரச்சினைகளுக்கு நிரந்தரதீர்வு காண முடியும். மாறாக மற்ற எதைச் செய்தாலும் அது மேம்போக்கான நடவடிக்கையாகவே இருக்கும் என்றார் அவர்.