புதன்கிழமைக்குள் போட்டி இடங்களை சுத்தப்படுத்தும் பணிகள் முடியும்-தீட்சித்
டெல்லி: புதன்கிழமைக்குள் காமன்வெல்த் போட்டி தொடர்பான அனைத்து இடங்களையும் சுத்தப்படுத்தும் பணிகள் முடிவடையும் என்று டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார்.
இன்று காலை காமன்வெல்த் போட்டி அமைப்புக் குழு, டெல்லி வளர்ச்சி ஆணையம், மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்தார் தீட்சித். அப்போது போட்டிக்கான ஏற்பாடுகள், சுத்தப்படுத்தும் பணி உள்ளிட்டவை குறித்து விவாதித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், சுத்தப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன. அனைத்துப் பணிகளும் விரைவில் முடியு். புதன்கிழமைக்குள் துப்புறவுப் பணிகளை முடித்து விட்டு அனைத்து குடியிருப்புகளும் அணி நிர்வாகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டு விடும்.
தற்போது 22வது டவரில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இங்குதான் தென் ஆப்பிரிக்க அணி தங்கவுள்ளது. மொத்தம் 32 பிளாட்டுகள் இதில் உள்ளன. இங்கு பிளம்பிங் மற்றும் எலக்டிகல் பணிகள் சரியாக இருக்கின்றனவா என்பதை சோதனையிட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றார்.
இதற்கிடையே கேம்ஸ் வில்லேஜில் உள்ள குடியிருப்புகளில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே முழுமையாக தயார் நிலையில் உள்ளதாக ஒரு தகவல் கூறுகிறது.
மொத்தம் உள்ள 1168 பிளாட்டுகளில் 409 மட்டுமே தயாராக உள்ளனவாம். தற்போது மீதமுள்ள பிளாட்டுகளையும் தயார் படுத்துவதற்காக 43 எலக்ட்ரீசியன்கள், 24 பிளம்பர்கள் இரவு பகலாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனராம்.
இதற்கிடையே, கேம்ஸ் வில்லேஜில் தொடர்ந்து தண்ணீர் தேங்கிக் கிடப்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. நேற்று மட்டும் 40 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
இதுகுறித்து தீட்சித் கூறுகையில், பேஸ்மென்ட் பகுதியில்தான் நிறைய பிரச்சினைகள் உள்ளன. இதுதான் கவலை தருகிறது. இருப்பினும் சூரிய வெளிச்சம் நன்றாக இருந்தால், தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் தரை காய்ந்து பிரச்சினை குறையும் என்றார்.
தொடர்ந்து விலகும் போட்டியாளர்கள்:
இதற்கிடையே, காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகும் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. லேட்டஸ்டாக ஒருவர் விலகியுள்ளார்.
இங்கிலாந்து டென்னிஸ் வீராங்கனை எலினா பல்டாச்சா போட்டியிலிருந்து விலகியுள்ளார். சுகாதாரத்தைக் காரணம் காட்டி அவர் விலகியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கேம்ஸ் வில்லேஜின் நிலை குறித்து மீடியாக்கள் மூலம் அறிந்து அதிர்ந்துள்ளேன். உடல் நலப் பாதிப்பு வந்து விடக் கூடாது என்பதற்காக போட்டியில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்துள்ளேன் என்றார்.
முதலில் காயம், மற்றும் தேதிகள் இன்மை காரணமாக வீரர்கள் காமன்வெல்த் போட்டிகளில் இருந்து விலகினார்கள். பின்னர் காமன்வெல்த் ஏற்பாடுகளில் நடக்கும் குழப்பங்களும், ஊழல்களும் வெளிச்சத்திற்கு வந்ததையடுத்து பாதுகாப்பு மற்றும் சுகாதாரக் காரணங்கள் என்று கூறி விலகத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்டோபர் மாதம் 3-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை இந்த போட்டிகள் நடக்கிறது. கேம்ஸ் வில்லேஜைப் பார்த்த சர்வதேச அதிகாரிகள் அது அழுக்காகவும், தங்க முடியாத நிலையிலும் இருப்பதாகத் தெரிவித்தனர். இதையடுத்து பல வீரர்கள் விலகிக் கொண்டனர்.
இது தவிர கடந்த 19-ம் தேதி ஜும்மா மசூதியில் நடந்த துப்பாக்கிச் சூடு, டெங்கு ஆகியவற்றால் டெல்லிக்கு வர சர்வதேச வீரர்கள் தயங்குகின்றனர்.