ஆதர்ஷ் ஊழல்: மாட்டுகிறார் மத்திய அமைச்சர் ஷிண்டே!

மும்பையில் கார்கில் போர் தியாகிகள் குடும்பத்துக்காக கட்டப்பட்ட ஆதர்ஷ் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ததில் ஊழல் நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மராட்டிய முதல்வர் அசோக் சவான், மற்றும் அரசியல் பிரமுகர்ள் ராணுவ அதிகாரிகள் பினாமி பெயரில் தங்களுக்கு வீடுகளை ஒதுக்கி இருந்தனர்.
இந்த விவகாரம் வெளியே வந்ததை அடுத்து அசோக் சவான் பதவியை ராஜினாமா செய்தார். புதிய முதல்வராக பிரிதிவிராஜ் சவான் சமீபத்தில் பதவி ஏற்றார்.
இந்த நிலையில் முன்னாள் முதல்வரும் தற்போதைய மத்திய அமைச்சருமான சுஷில்குமார் ஹிண்டே மீதும் ஆதர்ஷ் வீடு ஊழலில் பங்கு இருப்பதாக பரபரப்பாக புகார் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மும்பை வக்கீல் ஒய்.பி.சிங், சமூக சேவகர்கள் சிம்பரீத் சிங், சர்தோஷ் தவுங்கர் ஆகியோர் மும்பை ஊழல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளனர். 71 பக்கங்களில் புகார் விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளன.
அதில், "ஆதர்ஷ் வீடு கட்ட நில ஒதுக்கீடு மற்றும் அனுமதி அளிக்கப்பட்ட நேரத்தில் சுஷில் குமார் ஹிண்டே மராட்டிய முதல்வராக இருந்தார். 2003 ஜனவரி முதல் 2004 அக்டோபர் வரை அவர்தான் முதல்வர். அப்போது நடந்த அனைத்தும் விதிமுறைகளை மீறியே வழங்கப்பட்டு உள்ளது.
ஆதர்ஷ் குடியிருப்பில் 2004-ம் ஆண்டு ஆகஸ்டு 24-ந்தேதி 51 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது. அப்போது மராட்டிய சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்தல் விதிமுறைகள் அமலில் இருந்தன. தேர்தல் விதிமுறைகளை மீறி வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
வீடுக்கான நிலம் மார்க்கெட் மதிப்பை விட 20 சத வீதம் குறைவான விலையில் கொடுக்கப்பட்டது. இவற்றுக்கு சுஷில்குமார் ஷிண்டேதான் காரணம்.
வீடு கட்டும் திட்டத்துக்கு சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமலேயே கட்டிடம் கட்ட உரிமம் வழங்கப்பட்டது. கடற்கரை மண்டல விதிகளின் படியும் உரிய அனுமதி பெறவில்லை.
வருவாய்த்துறை மற்றும் நிதித்துறைகளிடம் முறைப் படி அனுமதி பெறாமலேயே முதல்வராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே நேரடியாக தலையிட்டு தனது அதி காரத்தை பயன்படுத்தி அனுமதி வழங்கியுள்ளார்.
ஆதர்ஷ் வீடு விவகாரத்தில் சுஷில்குமார் ஷிண்டே தனது பதவியை தவறாக பயன்படுத்தியதுடன் இதில் அதிக அக்கறை காட்டியுள்ளார்.
அவர் அரசு விதிமுறைகளை மீறியதுடன் இந்திய குற்றவியல் சட்டப்படி ஊழலும் செய்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வீடு ஒதுக்கீட்டில் பல அதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கிறது. சுஷில்குமார் ஷிண்டே முதல்வராக இருந்தபோது அவரது முதன்மை செயலாளராக இருந்தவர் சுபாஷ் வல்லா. இவரும் ஆதர்ஷ் ஊழலில் சம்பந்தப்பட்டுள்ளார்.
சுபாஷ் வல்லாவின் தாயாருக்கும் இதில் வீடு ஒடுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வருவாய் செயலாளர் ஜோஷி, காங்கிரஸ் தலைவர் கித்வானி, கட்டுமான தொழில் நிறுவன அதிபர் ஆர்.சி.தாகூர் ஆகி யோருக்கும் ஊழலில் பங்கு இருக்கிறது. எனவே அனைவர் மீதும் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்..." என்று கூறப்பட்டுள்ளது.
புகாருக்கான ஆதாரங்களும் அனுப்பப்பட்டுள்ளன.
சுஷில்குமார் ஷிண்டே மீது புகார் கூறப்பட்டு இருப்பதால் அவருடைய மத்திய அமைச்சர் பதவிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications