நீதிபதிகள் மீது சீமான் சகோதரர் புகார்... வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றம்!
இயக்குநரும் நாம் தமிழர் கட்சியின் தலைவருமான சீமான் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாகக் கூறி, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு சிறையில் அடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து, விருகம்பாக்கத்தைச் சேர்ந்த அவரது சகோதரர் ஜேம்ஸ் பீட்டர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆள் கொணர்வு ரிட் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு 4 மாதங்கள் ஆகியும், அந்த வழக்கில் அரசு ஆஜராகி வாதாடவில்லை. கடைசியாக டிசம்பர் 6-ம் தேதிக்கு (திங்கள்கிழமை) வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்படி, நீதிபதிகள் எம். சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் திங்கள்கிழமை வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜேம்ஸ் பீட்டரின் வழக்கறிஞர் சந்திரசேகர், வழக்கு மீதான விசாரணை இப்ப வேறு நீதிபதிகளைக் கொண்ட பெஞ்சுக்கு மாற்றக் கோரி தலைமை நீதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது என்று கூறி, அதன் பிரதியை நீதிபதிகளிடம் வழங்கினார்.
அதில், "ஆள் கொணர்வு ரிட் மனு கடந்த 4.8.10-ம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, விசாரணைக்காக செப்டம்பர் 21-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது. அன்று விசாரணை நடைபெறாததால் அக்டோபர் 7-ம் தேதிக்கு பட்டியலிடப்பட்டது. அப்போதும் விசாரணையில்லை.
அரசு சார்பில் வாய்தா வாங்கியதை அடுத்து, அந்த வழக்கு அக்டோபர் 22-ம் தேதி, நவம்பர் 3, 16, 25 தேதிகள், டிசம்பர் 3-ம் தேதி என விசாரணை நடைபெறாமல் வழக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் சொக்கலிங்கம், கர்ணன் ஆகியோர் வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்தி வருவதாக தெரிகிறது.
அதனால் இந்த நீதிபதிகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இவ்வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகள் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.
அதை ஏற்று சீமான் வழக்கு விசாரணையை வேறு நீதிபதிகளுக்கு மாற்ற வசதியாக, தலைமை நீதிபதியிடம் வழக்கை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.