இலங்கை பயணத்தில் 'நடந்தது என்ன?': கருணாநிதிக்கு எஸ்.எம்.கிருஷ்ணா பதில் கடிதம்
எனd இலங்கை பயணத்துக்கு முன்பாக தாங்கள் நவம்பர் 24ம்ந் தேதி எழுதிய கடிதம் கிடைத்தது. அந்த கடிதத்தில் தாங்கள் நீங்கள் குறிப்பிட்டிருந்த விஷயங்கள் பற்றி இலங்கையில் பல தரப்பினருடன் விவாதிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
போரினால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வது தொடர்பாக அந்நாட்டு அரசாங்கம் மீண்டும் சாதகமான நிலைப்பாட்டினை உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கையில் முகாம்களில் தற்போது 16,000 முதல் 17,000 தமிழர்கள் தங்கியிருப்பதாக எனக்கு தகவல் அளிக்கப்பட்டது.
முகாமில் உள்ள தமிழ் மக்களை மறுகுடியமர்வு செய்வதிலும், வடக்கு மற்றும் கிழக்கு இலங்கை பகுதியில் வாழும் தமிழ் மக்களின் புனர்வாழ்வுக்கு இந்திய அரசு செய்து வரும் உதவிகளை அப்பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாராட்டினார்கள்.
எனது பயணத்தின்போது, இந்திய அரசு சார்பில் அங்கு மேற்கொள்ளப்படவிருக்கும் வடக்கு மாகாண ரயில்வே திட்டத்தையும், 1,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளையும் நான் தொடங்கி வைத்தேன்.
இலங்கையில் முகாம்களில் தங்கவைக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரப் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக வட இலங்கையில் 500 டிராக்டர்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை மக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியிலும் நான் கலந்து கொண்டேன்.
போரினால் இடம்பெயர்ந்த மக்களின் மறுவாழ்வுக்காகவும், அவர்கள் அமைதியாகவும், கெளரவமாகவும் வாழ்வதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு உறுதியாக வழங்கும்.
எனது பயணத்தின்போது, யாழ்ப்பாணத்தின் இந்திய தூதரகத்தையும் திறந்து வைத்தேன். இதன் மூலம், இலங்கை வாழ் மக்களுக்கும், நமது மக்களுக்கும் இடையிலான நட்புறவு வலுப்பெறும்.
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக, தமிழ் மக்கள் மற்றும் இதர சமுதாயத்தினருடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு இலங்கை அதிபரிடம் வலியுறுத்தியுள்ளேன்.
தமிழக மீனவர்களின் பாதுகாப்பு பற்றியும் இலங்கை அரசிடம் பேசியுள்ளேன். இருநாட்டு மீனவர்களும், கடலில் மீன் பிடிப்பது தொடர்பாக 2008ம் ஆண்டில் இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை பின்பற்றும்படியும் இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளேன் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
முகாம்களில் இருக்கும் தமிழர் குறித்து இலங்கை அரசு சொன்ன தகவல்களை மட்டும் அப்படியே கேட்டுக் கொண்டு திரும்பி வந்துள்ளார் கிருஷ்ணா. அந்தத் தகவலை ஒரு போன் செய்து கூட அந் நாட்டு அமைச்சரிடம் கேட்டிருக்கலாமே.
அதே நேரத்தில் சமீபத்தில் இலங்கை சென்று வந்த வெளியுறவுத் துறை செயலாளர் நிருபமா ராவ், முகாம்களில் 30,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் இருப்பதாகக் கூறியது நினைவுகூறத்தக்கது.
இலங்கையில் ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள்:
இதற்கிடையே இலங்கை கடற்படையின் 60து ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளின் கடற்படைத் தளபதிகள் இலங்கை செல்கின்றனர்.
ஆஸ்ரேலியா, வங்கதேசம், இந்தியா, மாலத் தீவு, மலேசியா, பாகிஸ்தான், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளின் கடற்படைத் தளபதிகள் டிசம்பர் 7ம் தேதி நடைபெறவுள்ள கருத்தரங்கில் பங்கேற்பதற்காக கொழும்பு வரவுள்ளனர்.