கருணாநிதி ஓய்வெடுத்துக் கொள்ளட்டும்! - சீமான்
கலைஞரும் அவர் குடும்பமும் ஆண்டதுபோதும், இனி ஓய்வெடுத்துக் கொள்ளட்டும் என்றார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.
ராஜபக்சேக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக, தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், நேற்று விடுதலை செய்யப்பட்டார். அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தது செல்லாது என்று உயர்நீதி மன்றம் கூறிவிட்டதால் விடுதலை செய்யப்பட்டார்.
சிறையிலிருந்து வெளியில் வந்த அவர், சிறைக்கு வெளியே அமைக்கப்பட்ட மேடையில் ஏறி பேசினார். அவர் கூறுகையில், "தமிழகத்திலேயே ஜெயலலிதாவும், கலைஞரும் ஒரே ஒரு விவகாரத்தில் மட்டுமே ஒற்றுமையாக உள்ளார்கள். அந்த ஒற்றுமை கொள்ளை அடிப்பதை பற்றி பேசுவதில்தான்.
வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரசை இல்லாமல் அழிப்பதே எங்கள் நோக்கம். எந்தக் கூட்டணியில் இருந்தாலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், ஞானசேகரன் போன்றவர்கள் எங்கே நின்றாலும் தோற்கடிப்போம்.
கார்த்தி சிதம்பரம் எல்லாம் சவால் விடுகிறார்கள். கார்த்தி சிதம்பரமே! எங்களுடன் போட்டி போட கார்த்தியாக வா... சிதம்பரத்தை சேர்த்துக்கொண்டு வராதே. காங்கிரஸ் கட்சி என்பது வெள்ளைக்காரன் ஆரம்பித்து வைத்த கட்சி. அந்த கட்சியோடு இணைந்து வராதே.
நானோ, திருமாவளவனோ தமிழர்களுக்காக தனித்து ஒரு கட்சியை உருவாக்கினோம். உங்களைப்போல அடுத்தவன் முதுகில் சவாரி செய்யவில்லை. இதோ வருகிறது தேர்தல். உங்கள் உலக தலைவனை ராகுல்காந்தியை அழைத்து வா. போட்டி போடட்டும். மண்ணை கவ்வ வைத்து துரத்தியடிப்போம்.
கலைஞர் குடும்பமே காங்கிரசை தூக்கி சுமக்காதே. பீகாரிலேயே 4 இடங்களில் மட்டுமே ஜெயிக்க முடிந்தது. தமிழகத்தில் அந்த இடம் கூட கிடைக்கக் கூடாது அந்த கட்சிக்கு.
கலைஞரே! உங்கள் குடும்பம் ஆண்டது போதும். பாவம்... உங்களது குடும்பம் ஒன்றே தமிழகத்திற்காக எவ்வளவு காலம்தான் உழைத்துக்கொண்டிருப்பது. தயவு செய்து ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். புதியதாக நாங்கள் வந்து ஆளுகிறோம். நல்ல ஆட்சி எதுவென்றபு காட்டுகிறோம்...
தேர்தல் நேரத்தில் நான் பேசக்கூடாது என்றுதானே சிறையில் அடைத்தீர்கள்... இதோ வந்துவிட்டேன். இனி நான் பேசுவதை யாராலும் தடுக்க முடியாது... உங்களால் தாங்கவும் முடியாது!" என்றார்.