தங்கம் விலையைத் தொட்டது கனகாம்பரம் பூவின் விலை
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் நேற்று வரலாறு காணாத வகையில் தங்கத்திற்கு இணையாக ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சுமார் 150க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பூக்கள் அனைத்தும் சங்கரநாராயணசாமி கோவிலில் உள்ள மொத்த பூ மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. எந்த வருடமும் இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களாக பூக்களின் விலை தாறுமாறாத உயர்ந்து வருகிறது. கடந்த 9ம் தேதி 1 கிலோ கனகாம்பரம் ரூ.ஆயிரத்திற்கும், நேற்று ரூ.1500க்கும், விற்பனையானது.
இன்று அதிகளவு சுபமூகூர்த்தம் உள்ளதாலும், மார்க்கெட்டுக்கு பூவின் வரத்து குறைவாக இருந்ததாலும் வரலாறு காணாத வகையில் ஒரு கிலோ கனகாம்பரம் ரூ.2 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. மல்லி ரூ.1250க்கும், பிச்சி ரூ.600க்கும், அரளி ரூ.300க்கும் விற்பனையானது. சங்கரன்கோவில் பூ மார்க்கெட்டில் பூவின் விலை சமீப காலமாக உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.